Wednesday, August 08, 2007

53வது தேசிய விருதுகள்

ஒரு வழியாக 53வது தேசிய விருதுகள் அறிவிக்கப் பட்டு விட்டன. தமிழ்ப் படங்கள் பெரிய ஏமாற்றத்தைச் சந்தித்திருக்கின்றன.

சிறந்த குடும்பப் படமாக சேரனின் "தவமாய்த் தவமிருந்து" தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது.


இப்போதுதான் ஆச்சரியம்!!!

சிறந்த ஒளிப்பதிவாளராக "சிருங்காரம்" படத்திற்கு ஒளிப்பதிவு செய்த மது அம்பாட் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்
சிறந்த இசையமைப்பாளராக "சிருங்காரம்" படத்திற்கு இசையமைத்த "லால்குடி" ஜெயராமன் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்.
சிறந்த நடன அமைப்பாளராக "சிருங்காரம்" படத்திற்கு நடனம் அமைத்த சரோஜ் கான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

இந்தப் படத்தை எப்பாடு பட்டாவது பார்த்து விடுவது என்று நான் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறேன்.

சிறந்த குறும்படமாக வசந்த் தூர்தர்ஷனுக்கு இயக்கிய "தக்கையின் மீது நான்கு கண்கள்" தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது.

தவிர அன்னியன் படத்திற்கு சிறந்த தொழில்நுட்பத்திற்கான விருது கிடைத்திருக்கிறது.

தமிழின் சிறந்த படமாக "ஆடும் கூத்து" தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது.

மற்றபடி
சிறந்த படம்: கால்புருஷ் (பெங்காலி)
இந்திரா காந்தி விருது - இயக்குநரின் சிறந்த முதல் படம்: பரினீதா (பிரதீப் சர்க்கார் - இந்தி)
சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம்: ரங் தே பசந்தி (இந்தி)
நர்கீஸ்தத் விருது - தேசிய ஒருமைப்பாட்டிற்கான சிறந்த படம்: தைவனமதில் (மலையாளம்)
சிறந்த சமூக சிந்தனைத் திரைப்படம்: இக்பால் (இந்தி)
சிறந்த சுற்றுச் சூழல் திரைப்படம்: துத்தூரி (கன்னடம்)
சிறந்த குழந்தைகள் திரைப்படம்: ப்ளூ அம்ப்ரல்லா - நீலக்குடை (இந்தி)
சிறந்த இயக்குநர்: ராகுல் தோலக்கியா (பர்சானியா)
சிறந்த நடிகர்: அமிதாப் பச்சன் (பிளாக்−இந்தி)
சிறந்த நடிகை: சரிகா (பர்சானியா − ஆங்கிலம்)
சிறந்த துணை நடிகர்: நஸ்ருதீன் ஷா (இக்பால்)
சிறந்த துணை நடிகை: ஊர்வசி (அச்சுவிண்டே அம்மா - மலையாளம்)
சிறந்த குழந்தை நட்சத்திரம்: சாய்குமார் (பொம்மலாட்டா - தெலுங்கு)
சிறந்த பின்னணிப் பாடகர்: நரேஷ் ஐயர் (ரங் தே பசந்தி)
சிறந்த பின்னணிப் பாடகி: ஷ்ரேயா கோஷல் (பஹேலி - இந்தி) -- இது இவருக்கு இரண்டாவது விருது
சிறந்த திரைக்கதை: பிரகாஷ் ஜா, ஸ்ரீதர் ராகவன், மனோஜ் தியாகி (அபஹரன் - இந்தி)
சிறந்த ஒலிப்பதிவு: நகுல் கம்தே (ரங் தே பசந்தி)
சிறந்த எடிட்டிங்: பி எஸ் பாரதி (ரங் தே பசந்தி)
சிறந்த கலை இயக்குநர்: சி பி மோரே (தாஜ்மகால் - இந்தி)
சிறந்த உடை அமைப்பாளர்: அன்னா சிங் (தாஜ்மகால்) & சபயாச்சி முகர்ஜி (பிளாக்)
சிறந்த பாடலாசிரியர்: பர்கூரு ராமச்சந்திரப்பா (தாயி - கன்னடா)
சிறப்பு விருது: அனுபம் கெர் (மைனே காந்தி கோ நஹி மாரா - இந்தி)

வெற்றி பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்

Tuesday, July 24, 2007

ஹாரி ஓம்... ஹாரி ஓம்...

ஹூம்... ரொம்ப நாள் கழிச்சு வந்து ஒரு புதுப் பதிவு... அது நம்ம ஹாரி பாட்டரைப் பற்றி என்று நினைக்கையிலேயே புளகாங்கிதப் புன்னகை பூக்கிறேன்.

புத்தகத்தைக் கடந்த மார்ச் மாதமே ப்ரீ புக்கிங் செய்து வைத்திருந்தேன். புத்தகம் வருமுன் கடந்த ஒரு வாரமாகவே நான் தேன் குடித்த நரி போல் திரிந்து கொண்டிருந்தேன். அதே வாரம் ஐந்தாவது பாகப் படம் வேறு வந்து விட்டதா? கள் குடித்த குரங்கிற்குக் கவட்டையில் குளவியும் கொட்டியதைப் போல் ஆகி விட்டிருந்தது (அட என்ன கவிதை...என்ன கவிதை)! வீட்டில் அனைவரும் வேக வேகமாக ஒரு மனநல மருத்துவரைக் காணும் முன் படத்திற்கு அதுவும் ஐமேக்ஸ் 3டி −− முன்பதிவு செய்து வீட்டில் அனைவரும் சென்று பார்த்தோம்.

அன்றிலிருந்து புத்தகம் வரும் நாள் பற்றி தினமும் கற்பனை செய்து கொண்டே இருந்தேன். வீட்டில் புத்தகமே இல்லாமலும் புத்தகம் படிப்பது போல் பாவனையில் இருந்த என்னைப் பார்த்துக் கலவரம் ஏற்படாதது ஆச்சரியமே...

ஒரு வழியாக சனிக்கிழமை ஜூலை 21ம் தேதி வந்து சேர்ந்தது. அதாவது நானே அதைத் தரதர என்று பல கோடி ஹாரி விசிறிகளுடன் இணைந்து இழுத்து வந்திருந்தேன். என்றைக்கும் எட்டு மணிக்குக் கூட எழுந்திருக்காத நான் ஐந்தரை மணிக்குக் குளித்து முழுகிக் கிளம்பி இருந்ததைப் பார்த்து எங்க அம்மா பிளந்த வாயில் அரைக்கிலோ சர்க்கரை போடலாம் :)

ஆறரை மணிக்குக் கடை திறக்கும் என்று போட்டிருந்ததை நம்பி ஆறே காலுக்குப் போயிக் கால் கடுக்கப் பார்த்தால் எனக்கு முன்னால் ஒரு 200 பேர்... வயது வித்தியாசமில்லாமல் ஆறிலிருந்து அறுபது வரை. என்னால் ஒரு பக்கம் ஆனந்தக் கண்ணீர் இன்னொரு பக்கம் இவ்வளவு நேரம் ஆகிறதே என்ற துக்கக் கண்ணீர்... ஆக மொத்தம் நான் அழுது கொண்டே அழுகின்றேன்.

ஏதோ பெரிய விழாவைப் போல் ஈ டிவி, CNN IBN கேமிராக்கள் கடை வாசலைத் துளைத்து கொண்டு நின்றன.


ஏதோ காதலர்கள் ஒரு நிமிடம் ஒரு யுகம் என்றெல்லாம் சொல்வார்களே... அதெல்லாமெனக்கு அப்போது மிகச் சாதாரணமாகப் பட்டது. ஒவ்வொருவராக உள்ளே செல்ல ஆரம்பித்தனர். முதன் முதலில் ஒரு பொடிசு ஆர்வமாகப் புத்தகத்தை வாங்கி வெளியே வந்தவுடன் தன்னுடைய 26-ஐயும் காட்டியது (மீதி ஆறு விழுந்து விட்டது). காத்திருந்த டிவி கேமிராக்காரர்கள் பின் லேடனைப் பார்த்த அமெரிக்க ராணுவத்தினரைப் போல் பாய்ந்து ஓடினார்கள். பொடிசு அரண்டு போய்ப் புத்தகத்தை இறுக்கப் பிடித்துக் கொண்டு அதன் தந்தையின் பின்புறம் ஒட்டிக் கொண்டது. புத்தகத்தைப் பிடித்துக் கொண்டு போஸ் கொடுக்கச் சொல்லி அனைவரும் அதன் காலைப் பிடிக்காத குறையாகக் கெஞ்சினர். ஒரு வழியாக அனைவரையும் பத்தடி தள்ளி நிற்கச் சொல்லிவிட்டு அந்தப் பொடிசு போஸ் கொடுத்த கையோடு என்னைக் கடந்து செல்லும்போது புத்தகத்தின் முதல் வரிகளைச் சத்தம் போட்டுப் படிக்கத் துவங்கியது. யாருக்கும் தெரியாமல் என் ஆத்திரம் தீர ஒரு கிள்ளு கிள்ளி விட்டேன்.

வழக்கம் போல் என் முறை வர ஒரு மணி நேரம் ஆகியது. சரியாக என் வரிசை எண் வரும்போது புதிய பண்டல் பிரிக்க வேண்டி இன்னும் பத்து நிமிடம் இழுத்தடித்தது -- இதை எல்லாம் போக்கிப் புத்தகம் கிடைத்தது. வராது வந்த மாமணி போல் என்றெல்லாம் சொல்கிறார்களே... அது இதற்கு முன் எம்மாத்திரம். அப்புறம் எப்படி வண்டியை ஓட்டி எப்படி வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். எப்படிப் படிக்க ஆரம்பித்தேன் என்பதெல்லாம் நினைவில்லை. அவ்வப்போது வீட்டில் அதை வாங்கு இதைச் செய் என்ற "இக"க் கட்டளைகள் எல்லாம் "பர" உலகத்தில் இருந்த என் காதில் விழ நியாயமில்லை.

புத்தகம் படிக்கும் போதே அங்கங்கு சிரிப்புகளும் மௌனமான அழுகைகளும் பெருமூச்சுகளும் என் உள்ளே முட்டி முட்டி எழுந்தன. ஒரு வழியாகப் படித்து முடிக்கும் போது அடுத்த நாள் மதியம் ஆகி விட்டிருந்தது. அதற்குப் பிறகு உள்ளோடிய எண்ணங்களில் ஒரு சில மணி நேரங்கள் பிரமை பிடித்து இருந்தேன்.

வீட்டில் அனைவரும் ஒரு வழியாக நான் படித்து முடித்தது அறிந்தவுடன் அந்தப் புத்தகத்தை என் கையிலிருந்து பிடுங்கி ஒரு மூலையில் வைத்த பின்புதான் பெருமூச்சு விட்டனர். பிறகு வழக்கம் போல் இக வாழ்வின் நிதர்சனங்கள் என்னை ஹாக்வார்ட்சில் இருந்து கொண்டு வந்து சேர்த்திருந்த வேளை மீண்டும் வழக்கம் திரும்பியது.

அன்று இரவு விளக்கைப் போட்டுக் கொண்டு திரிந்த என்னை மீண்டும் பார்த்த எங்க அம்மாவின் பார்வையில் தெரிந்த பீதியை யாராவது முழுவதுமாக விளக்கினால் அவர்களுக்குச் சாகித்ய அகாடமிப் பரிசு நிச்சயம்.

காரணம்...

இப்போது மீண்டும் முதல் பாகத்தில் இருந்து படிக்க ஆரம்பித்திருக்கிறேன்.

பி.கு.: என்றைக்காவது இந்தப் புத்தகத்தைப் பற்றிய விமர்சனத்தை எழுத வேண்டும். இப்போது எழுதினால் சில விஷயங்களைச் சொல்லப் போய் ஹாரி வெறியர்கள் ஆட்டோ என்ன ஆட்டம் பாமையே அனுப்புவார்கள் என்பதால் அவர்கள் சொன்னவுடன் போடுகிறேன்.

Tuesday, May 01, 2007

பாட்டு எப்படி? - நான் அவன் இல்லை

பாடல்கள்: பா. விஜய், ???

1974-ல் ஜெமினி நடிக்க பாலசந்தரின் இயக்கத்தில் வந்த சினிமாவின் தழுவல் இந்தப் படம். படமே வெளிவந்தபின் அதுவும் படம் கொஞ்சம் பேசப்பட்டபின் இப்போதுதான் பாடல்களைக் கேட்க வேண்டும் என்று தோன்றியது. எந்தவித எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தாத படமாக இருந்தது இந்தப் பட்த்தின் பெரிய பலம் என்பேன். ஏனெனில் எதிர்பார்ப்புகள் இல்லாமல் கேட்கும் போது இந்தப் பாடல்கள் கவர்ச்சியாகத்தான் இருக்கின்றன. விஜய் ஆண்டனியின் முந்தைய படங்களை வைத்து அவர்மீது இருக்கும் மதிப்பை இந்தப் பாடல்கள் காப்பாற்றுகிறது என்றே சொல்வேன்.

1. ஏன் எனக்கு மயக்கம்
பாடியவர்: ஜெயதேவ், சங்கீதா ராஜேஸ்வரன்
ஜெயதேவை ஒரு அசத்தல் பாட்டு மூலம் “டிஷ்யூம்”-ல் அறிமுகம் செய்தவர் விஜய்தான். இந்தப் படத்திலும் ஜம்முனு ஒரு பாட்டு கொடுத்திருக்கிறார். மிகச் சாதாரண தாளம் போட வைக்கும் மெட்டு – நடு நடுவே வயலின்கள்! அவ்வளவுதான்! மற்றபடி தெளிவான உச்சரிப்புகளுடன் இந்தப் பாடல் கவர்கிறது.

மதிப்பு: 5

2. காக்க காக்க
பாடியவர்: சாருலதா மணி, மாயா, மேகா, மணி, விஜய் ஆண்டனி
ஒரு கூட்டமே பாடி இருப்பதால் விஜய் குரல் தவிர வேறெதுவும் அடையாளம் தெரியவில்லை. ஆச்சரியம் அனைத்துக் குரல்களும் உச்சரிப்பில் சுத்தம்! நடுவில் குத்துடன் கூடிய கனமான மேற்கத்திய இசை தாளம் போட வைக்கிறது. முதல் முறை கேட்கும்போதே பிடிக்கக் கூடிய பாடல். ஏற்கனவே “நா நா நா நான் அவன் இல்லை” இளசுகளைக் கவர்ந்து விட்டதாகக் கேள்வி.

மதிப்பு: 6


3. மச்சக் கன்னி

பாடியவர்:ஜெயா ராஜகோபாலன், சத்யாலட்சுமி, விஜய் ஆண்டனி
இந்தப் படத்தில் மட்டும் எக்கச்சக்கமான புதுப் பாடகிகளை அறிமுகப் படுத்தி இருக்கிறார் விஜய். இதற்கு முன் வந்த பல டப்பாங்குத்துப் பாடல்களைப் போலவே இதிலும் அர்த்தம் புரியாத வார்த்தைகள் அங்கங்கு உண்டு. கொஞ்சம் முன்னேற்றம் இருப்பினும் விஜய் ஆண்டனி எப்போதும் போல் கத்தியால் குத்தியது போலவே பாடுகிறார். இத்தனை இருப்பினும் என்னமோ உள்ளே இழுக்கிறதே, அது என்ன???

மதிப்பு: 6


4. நீ கவிதை

பாடியவர்:கிரிஷ், மேகா
காதல் பாட்டுதான். ஏற்கனவே எங்கேயோ கேட்டது போல் மெட்டு. சொல்ல அப்படி ஒன்றுமில்லை. முக்கல் முனகலைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

மதிப்பு: 4


5. ராதா காதல் வராதா
பாடியவர்:பிரசன்னா, மாயா, சங்கீதா ராஜேஸ்வரன், வினயா
ரீமிக்ஸ் காலத்தில் இப்படி ஒரு பாட்டு இல்லைன்னா எப்படிங்க? ஆனா அந்த டப்பாங்குத்தையும் கொஞ்சம் சுகமாத்தான் போட்டிருக்காப்புல விஜய். ரீமிக்ஸ்னாலே நடுநடுவில் “look at this” அப்படி இப்படின்னு கத்துறவங்களைத் தடை செய்ய ஒரு சட்டம் கொண்டு வந்தாலென்ன?

மதிப்பு: 4


6. தேன் குடிச்ச
பாடியவர்:நரேஷ் ஐயர், தீபா மரியம், விஜய் ஆண்டனி
இந்தப் படத்திலேயே மூன்றாவது குத்துப் பாட்டு. இரண்டாவது ரீமிக்ஸ் பாட்டு! எவ்வளவுதான் தயாரிப்பாளருக்கு மிச்சம் பிடிக்க வேண்டி வந்தாலும் நிறைய பாடல்களைத் தானே பாடுவதை விஜய் குறைப்பது அவருக்கு மட்டுமல்ல, கேட்கும் நமக்கும் அதுதான் நலம்.

மதிப்பு: 4


மொத்தம்: 45%

மதிப்பும் விளக்கமும்:
7 - 10: “இது பாட்டு”
6: “சூப்பர்”
5: “அட ... நல்லாருக்கே!”
4: “பலமுறை கேட்டாப் பிடிக்கலாம்”
0-3: “கேட்கலின் கேட்காமை நன்று”

Friday, April 20, 2007

ஆ(ற்)று அழகுகள்

வழக்கம் போல இந்த மாதிரி ஆற்றாமைகளைக் கூட ஆறு ஆறாச் சொல்லும் தொடர் பதிவுக்கு நம்மப் பதிவுலகச் சிவமுருகன் கூப்பிட்டுட்டாரு. தலைவர் கூப்பிட்டு நம்ம முடியாதுன்னு வேற சொல்ல முடியுமா என்ன?

அதுனால ஆறு அழகுகள் பற்றி இல்லாத மூளையைக் கசக்கி யோசித்துக் கொண்டிருந்த போது தோன்றியதுதான் இது. இவ்வுலகின் உயிர்களின் தீராத தாகத்தைக் கூடத் தீர்க்கும் வல்லமை கொண்ட நீர்நிலைகள் உண்டு. அவற்றில் பெரும்பாலானவை சமுத்திரமாக மக்களின் இந்த உணர்வைத் தணிக்கப் பயன்படாது இருக்கின்றன. சில நீர்நிலைகளோ நிலங்களால் சூழப்பட்டு இருக்கின்றன. எனவே எவ்வளவு பெரியதாக ஏரி குளம் என்று இருந்தாலும் அவை ஒரு பெரிய சைஸ் குட்டை என்றே கருத வேண்டும். அவ்வகையில் ஆறு என்பது நிலம் கொண்ட நிலத்திற்கும் கடல் கொண்ட நிலத்துக்கும் இயற்கை போட்ட பாலம் என்றே நான் கருதுகிறேன். ஓடும் தண்ணீரே சுகம், சுத்தம்!!! எனவே நான் கண்ட ஆறு ஆறுகள், அவற்றின் அழகுகள் குறித்துச் சொல்ல விழைகிறேன். எந்த ஆற்றுக்கும் அது மக்களுக்கு எத்தனை உபயோகமாயிருக்கிறது என்பதில்தான் ஆன்மா அடங்கி இருக்கிறது. அது தவிர மீதி அழகுகளை மட்டுமே காண்கிறேன் நான்!


1. நயாக்ரா
முதலில் இண்டர்நேஷனல் லெவல்ல ஆரம்பிப்போம். நயாக்ரா நதி அமெரிக்காவின் ஈரி (Erie) ஏரியில் இருந்து கனடாவின் ஒண்டாரியோ ஏரிக்குப் பாய்கிறது. எனக்குத் தெரிந்து ஏரியில் இருந்து ஏரிக்குப் பாயும் நதி இதுவே! ஆறு என்பதற்கு இயற்கை கொடுத்திருக்கும் சிறப்புத் தகுதி வேகம். அது இந்நதியில் நீக்கமற நிறைந்திருக்கிறது. முதன் முதலில் நயாக்ராவை நேரில் பார்த்த போது என் மனதில் இனம்புரியாத உற்சாகமே துள்ளியது. இதிலிருந்து நான் கண்டது இது.
நயாக்ராவுக்கு வேகம் அழகு!

2. கங்கை
அடுத்து நான் கண்டு வியந்த நதி கங்கை! சென்ற வருடத்தில் ஒரு முறை இமயமலைக்குச் சென்றிருந்த போது கங்கையின் ஆரம்பமான கங்கோத்ரியில் இருந்து ஹரித்வார் வரை ஹெலிகாப்டரில் காணும் வாய்ப்பு கிடைத்த்து. மெல்ல ஒரு மலைதேன் கூட்டில் இருந்து வெண்மையான தேனைப் போல் மெல்ல வழிந்து கொண்டிருந்த பேதைப் பருவ கங்கை மெல்ல மெல்ல தன் தங்கைகள் கலக்க கொஞ்சம் கொஞ்சமாக விரிந்து ஹரித்வாரில் அலங்காரம் கொண்ட தெரிவைப் பெண்மையாக மாறுவதைக் கண்டேன். முக்கியமாக முடி முதல் அடி வரை எங்கணும் நீரின் தெளிவு காணும் எவரையும் சிலிர்ப்போடு பற்றும் வியப்பு, ஒரு சிலிர்ப்பு!
கங்கைக்கு அழகு தெளிவு!

3. யமுனை
கங்கையின் தங்கை இந்த நங்கை! ஒவ்வொரு கிளை நதியும் கங்கையில் கலக்கும் இடத்திற்கும் ஒரு புராணக் கதாபாத்திரத்தின் பெயரைக் கொண்டு பிரயாகை (கர்ணப் பிரயாகை, தேவப் பிரயாகை) என்று பெயர் சூட்டினர் வடநாட்டார். ஆயின், எந்தப் பெயரும் தேவைப்படாத பிரயாகை யமுனை கங்கையில் அணையும் போதே உருவானது. யமுனை இன்றைய நிலையில் வடநாட்டு அரசியலில் எத்தனை பிரச்சினைகளை உருவாக்கினாலும் தாஜ்மகால் சென்றாலும் யமுனை உங்களைத் தேட வைக்கிறது.
யமுனைக்கு அழகு நீள்வடிவம்!

4. கோதாவரி
அதிகபட்சம் காவிரியின் அகலத்தைக் கண்டிருந்த எனக்கு கோதாவரியைக் கண்டவுடன் திறந்த வாய் மூடவில்லை என்பதில் என்ன ஆச்சரியம். கோதாவரியின் வெறும் 20% நீர் மட்டுமே 3 மாவட்டங்களை எங்கெங்கு காணினும் பசுமை ஆக்கி இருக்கிறது என்றால் அதன் பயன் பற்றிச் சொல்ல வேறென்ன உண்டு. ராஜமுந்திரிக்குள் நுழையும் முன் முதன் முதலில் 3 கிலோமீட்டர் நீளமுள்ள கோதாவரிப் பாலம் உங்கள் கண்களை மட்டுமல்ல உள்ளத்தையும் வெகு சீக்கிரம் கொள்ளை கொள்ளும்.
கோதாவரிக்கு அழகு அகலம்!

5. காவிரி
ஒவ்வொரு முறை திதி கொடுக்கும் போதும் அகண்ட காவிரியில்தான் கொடுப்பது வழக்கம். அன்று சோழ மன்னர்களின் அந்தப்புரங்கள் வரை நீண்டிருந்த காவிரி இன்று இரண்டு மாநிலங்களின் சட்டமன்றங்கள் வரை நீண்டிருப்பதுதான் அதன் சிறப்பு. ஒரு பக்கம் சிவசமுத்திரத்தில் பொங்குமாங்கடலாகப் பெருவீழ்வு கொள்ளும் காவிரி இன்னொரு புரத்தில் தஞ்சை தாண்டி ஆடிச் செல்லும் அழகே அழகு. பிறந்த வீட்டில் என்னதான் ஆட்டம் போட்டாலும் புகுந்த வீட்டில் ஒரு பெண் பொறுப்போடு நடந்து கொள்ளும் விதம் எத்தனை பொருத்தம் என்று காவிரியைப் பார்த்துதான் அறிந்து கொண்டேன். இரண்டு மாநிலங்களிலும் எத்தனை எத்தனையோ புயல்களைக் கிளப்பினாலும் தன் வழியில் அமைதியாகச் செல்லும் காவிரிக்கு எது அழகு?
காவிரிக்கு அழகு அமைதி!

6. வைகை
இண்டர்நேஷனல் லெவலில் ஆரம்பித்துக் கடைசியில் லோக்கல். என்ன இருந்தாலும் ஊர்ப்பாசம் போகுமா என்ன? வைகை! பேரைச் சொல்லும்போதே உள்ளுக்குள் சிலிர்ப்பு ஓடும். அந்த மேம்பாலமும் கீழ்ப்பாலமும் ஒரு காலத்தில் தண்ணீர் (நினைவில் நிறுத்துங்கள், நிஜமாகவே தண்ணீர்தான்) ஓடிய நினைவுகளும் என்றென்றும் மறக்காதவை. இன்று வெறும் ஓடுதண்ணீரில் அழகர் ஆற்றில் இறங்கும் அவலமும் என் நெஞ்சை விட்டு அகலாது. இதே வைகையில் வெள்ளம் வந்த போது மேம்பாலத்தில் இருந்து காலைக் கீழே வெள்ளத்தில் விட்டு விளையாடியது கூட நினைவுக்கு வரும். ஹூம் அது ஒரு பெருங்கனவு! சரி, அழகு என்று இன்றைய நிலையில் நான் எதைப் பற்றிச் சொல்லுவேன்? என்றாவது வைகைக் கரையில் அமைந்த ஒரு பூங்காவில் நான் என் பேரனுடன் உல்லாசமாக அமர்ந்திருப்பேன் என்று கனவு மட்டுமே காண்கிறேன்.
வைகைக்கு அழகு வைகைதான்!

என்னமோ சொல்றதை எல்லாம் சொல்லிட்டேன். நீங்க படிச்சு உங்க கருத்துகளைச் சொல்லுங்க மக்கா!

Thursday, April 19, 2007

பாட்டு எப்படி? - பெரியார்

பாடல்கள்: வைரமுத்து

இளையராஜா இசையமைத்திருக்க வேண்டியது ஞான. ராஜசேகரனின் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த படம். அந்தச் சர்ச்சைகள் எல்லாம் ஏற்கனவே எல்லாரும் எக்கச்சக்கமாக அலசி விட்டதால் இந்தப் பாடல்கள் ஸ்பெஷல் எதிர்பார்ப்பைப் பெறுகின்றன. அந்த எதிர்பார்ப்பை இவை நிறைவேற்றி இருக்கின்றனவா என்றால் ஓரளவுக்கு ஆமாம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆயின் பாரதியையும் மோகமுள்ளையும் ஒப்பிட்டுப் பார்க்கும் நோக்கு வந்து விடுகிறது (தவறுதான் இது!) அப்படி ஒப்பு நோக்கையில்தான் இந்தப் பாடல்கள் கொஞ்சம் டல்லடிக்கின்றன. ஆனால் மொத்தமாக நோக்குகையில் நெருப்புத் தெறிக்கும் பாடல் வரிகளின் (வைரமுத்து) முக்கியத்துவம் பளிச்சென்று வெளியே தெரியும்படியாகவே வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார் என்பது கண்கூடு. இது ஒரு பெரிய விஷயம், பாராட்டுகள்! தனித்தனியாகவும் பாடல்களைப் பார்த்துவிடுவோமே…

1. பகவான் ஒருநாள்
பாடியவர்: மது பாலகிருஷ்ணன், சூர்யபிரகாஷ், குருசரண்
“கண்காணா உன் கடவுள் தான் தோன்றி ஆகிறப்போ கண்கண்ட பேரண்டம் தான் தோன்றி ஆகாதோ?” – இது போன்ற பகுத்தறிவுவாதிகளின் அடிப்படைக் கேள்விகளைக் கவிதை வடிவமாக்கி இருக்கிறார் வைரமுத்து. வரிகளில் சர்ச்சை இருக்கும் அளவு சூடு இல்லாத்து நன்றே. கடைசியில் சீதை ராமர் பற்றிய சர்ச்சையும் உள்ளது. இசையைப் பொறுத்தவரை மொத்தமாக மென்மையான பாடல் இது. வெறும் மிருதங்கம் மட்டுமே பெரும்பான்மையாக வர மதுவின் குரல் உச்சரிப்பில் சுத்தபத்தமாக ஒலிக்கிறது.

மதிப்பு: 5

2. இடை தழுவிக்கொள்ள
பாடியவர்: ப்ரியா சுப்பிரமணியன்
அப்படியே தாளகதியில் நம்மை உள்ளே இழுத்துக் கொள்ளும் பாட்டு. முதல் முறை கேட்கையில் ஏதோ பழைய பாட்டு ரீமிக்ஸ் போல் இருந்தாலும் கேட்கையில் இனிக்கிறது. வரிக்கு வரி வார்த்தை விளையாட்டுதான், இந்தப் பாட்டு முழுவதும். அந்தப் புதுக்குரல் (இதற்கு முன் பரமசிவன் பட்த்தில்தான் பாடினார்) ப்ரியா நன்றாகவே இழைந்திருக்கிறார். ஆனால் பாட்டு முதலில் கேட்கும்போதே “ஓ ரசிக்கும் சீமானே” நினைவுக்கு வருவதுதான் பிரச்சினை.

மதிப்பு: 6

3. கடவுளா… நீ கல்லா…
பாடியவர்: மது பாலகிருஷ்ணன், ரோஷிணி, மாணிக்க விநாயகம்
சாட்டையால் அடிக்கும் வரிகள், சிலிர்க்கும் இசை (வீணை, தபலா, வயலின் என ஒரு கனமான பின்னணி இசை), தெளிவான உச்சரிப்பு, இத்தனையும் இருக்கையில் இந்தப் பாட்டு உள்ளத்தைச் சிலிர்க்கச் செய்வதில் ஆச்சரியம்தான் என்ன?
“நீங்கள் மட்டும் நீங்கள் மட்டும் விந்து விழுந்து பிறந்தவர்கள்
நாங்கள் மட்டும் நாங்கள் மட்டும் எச்சில் விழுந்தா பிறந்தவர்கள்?” – இப்படி வரிக்கு வரி பொறி பறக்கிறது பாட்டு முழுவதும். கடைசியில் “வானவில்லில் மட்டும் இங்கே வர்ணபேதம் இருக்கட்டும்” என்று முடிக்கிறார்கள். உணர வேண்டியவர்களுக்கு இதை விடத் தெளிவான பாடந்தான் எது?

மதிப்பு: 6

4. தை… தை… தை…
பாடியவர்: விஜயலட்சுமி, மாணிக்க விநாயகம்
நல்ல கர்நாடக இசைப் பின்புலத்தில் தேவதாசிகளின் (?!) வாழ்க்கை முறை சொல்லும் பாட்டு இது. ஏற்கனவே பலமுறை கேட்ட கருத்துகள். ஆனால் அவற்றைப் பாடல் வடிவமாக்கி இருப்பது சிறப்பு. விஜயலட்சுமியின் உச்சரிப்பு தெளிவாக இருக்கிறது. ஜதிகளை மாணிக்க விநாயகம் குரலில் கேட்க அத்தனை சுகமாயில்லை.

மதிப்பு: 4

5. தாயும் யாரோ

பாடியவர்: ஜேசுதாஸ்
ராம் படத்திற்குப் பிறகு ஜேசுதாஸின் மயக்கும் குரலில் அடுத்த பாட்டு. இன்னும் பிசிறடிக்கவில்லை. எனவே இன்னும் சில வருடங்கள் பாடலாம். ஏற்கனவே சில பாடல்களை இதே படத்தில் மென்மையாகவே கேட்ட பிறகும் நன்றாகவே இருக்கிறது. வித்யாசாகரின் தாலாட்டு மெட்டு (கந்தா கந்தா.. ஜோ ஜோ கந்தா…) நிஜமாகவே தாலாட்டுகிறதே! வரிகளில் ஒன்றும் அத்தனை விசேஷமில்லை.
மதிப்பு: 5

மொத்தம்: 52%

மதிப்பும் விளக்கமும்:
7 - 10: “இது பாட்டு”
6: “சூப்பர்”
5: “அட ... நல்லாருக்கே!”
4: “பலமுறை கேட்டாப் பிடிக்கலாம்”
0-3: “சுத்த திராபை”

Tuesday, April 17, 2007

பாட்டு எப்படி? - உன்னாலே உன்னாலே

ஜீவாவும் ஹாரிஸ் ஜெயராஜூம் 12பி, உள்ளம் கேட்குமே படங்களுக்குப் பிறகு இப்போது மீண்டும் இணைந்திருக்கிறார்கள். அருமையான கூட்டணி. ஜீவாவை ஒரு பெரிய இயக்குநர் வரிசையில் இன்னும் சேர்க்கும்படியான படங்கள் வரவில்லை. ஆனால் ஹாரிஸ் பல கட்டங்களை ஏற்கனவே தாண்டி விட்டார். ஜீவாவுக்கு ஒளிப்பதிவும் பாடல்களைப் படமாக்கும் வித்தையும் கைவந்த கலை! ஹாரிஸ் அதற்குக் கச்சிதமாகக் கைகோர்த்திருக்கிறார். இந்த வருடச் சிறந்த பாடல்களில் இவற்றில் சில இடம்பிடிக்கும் என்பதில் ஐயமில்லை. பாடல்களைக் கவிஞர் வாலியும் பா. விஜய்யும் எழுதி இருக்கிறார்கள். எந்தப் பாட்டை யார் எழுதியது என்று தெரியாமையால் சொல்லவில்லை. ரொம்ப எளிமையாகத் தாளம் போட வைக்கும் பாடல்கள் நிலைக்கும் என்று தெரிந்துதான் செயல்பட்டிருக்கிறார் ஹாரிஸ்.

1. ஹலோ மிஸ் இம்சையே

பாடியவர்: ஜி. வி. பிரகாஷ், அனுஷ்கா
ஹாரிஸின் இசையில் ஏற்கனவே பாடி இருந்தாலும் இசை அமைப்பாளர் ஆன பிறகு பிரகாஷ் பாடி இருக்கும் பாடல். ஹாரிஸ் டிரேட் மார்க் பாட்டு. அனுஷ்காவின் குரலை யுவன் உபயோகித்ததைப் பார்த்துப் பாடம் கற்றிருக்கிறார் ஹாரிஸ். ஆனால் பாட்டு ஏற்கனவே பல தடவை கேட்ட மாதிரியே இருப்பதுதான் பிரச்சினை. “அம்மான் மகளே” சில முறை கேட்டாலே பிடித்துப் போவாள்

மதிப்பு: 5


2. இளமை உல்லாசம்

பாடியவர்: கிரிஷ், ஷாலினி
சின்னப் பாட்டு. வாத்தியக் கருவிகளின் சத்தங்களைக் குறைத்து வார்த்தைகளுக்கும் குரல்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். கேட்கும்படியான இசையில் கேட்கும்படியான வரிகள். மூர்த்தி சிறிதென்றாலும் கீர்த்தி பெரிது.

மதிப்பு: 6


3. ஜூன் போனா

பாடியவர்: கிரிஷ், அருண்
புதிய பாடகர்கள். இளமையான வரிகள். முன்பு சொன்னது போல் மெல்லிய பீட்டு. மெட்டுக்கே முக்கியத்துவம்! “நட்பாச்சு லவ்வில்லையே… லவ்வாச்சு நட்பில்லையே” என்பதோடு “இந்த உலகத்தில் எவனுமே ராமனில்லை” கவிஞர் – உண்மைதான்! சில முறை கேட்டவுடனேயே முணுமுணுக்க வைக்கும் வரிகளும் தாளம் போட வைக்கும் பின்னணி இசையும் பாடலுக்குப் பலம்.

மதிப்பு: 6


4. முதல் நாள் இன்று

பாடியவர்: கே கே, மகாலட்சுமி, ஷாலினி
கே கேயும் மகாலட்சுமியும் இதற்கு முன் ஹாரிஸ் 12பி படத்திலும் ஒரு ஜில்லுப் பாட்டு பாடி இருக்கிறார்கள். இந்தப் பாட்டும் மேற்சொன்ன சூத்திரத்தில்தான் அடங்குகிறது. தாளம் போட வைக்கும் டிரம்ஸ் ஒலி, லேசாகவே குரல்களோடு வரும் கிடார் இசை! நல்ல பாட்டு!

மதிப்பு: 6


5. முதல் முதலாக (உன்னாலே உன்னாலே)

பாடியவர்: கார்த்திக், கிரிஷ், ஹரிணி
ஹ்ம்ம்… ஹாரிஸ் ராஜ்ஜியம் இங்கே உச்சம். அவரது மிகப் பலம் பொருந்திய மெட்டு. கிரிஷின் குரல் மட்டும் கார்த்திக்கின் கம்பீரத்துக்கு (ப ப ப ப… ன்னு கலக்குறார் பாருங்க…) முன் லேசாகப் பெண்குரல் போல் ஒலிக்கிறது – நெருடல்! ஆனால் ஹரிணியின் குரலைச் சிறப்பாகப் பயன்படுத்திய இசையமைப்பாளர்களில் ஹாரிஸுக்கு முதலிடம்! வரிகளும் சுகமோ சுகம்! கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க!

மதிப்பு: 7


6. வைகாசி நிலவே

பாடியவர்: ஹரிசரண், மதுஸ்ரீ
ஒரு முறை கேட்டால் போதும்… உங்கள் மனதில் நச்சக்கென்று சம்மணம் கட்டி உட்கார்ந்து கொள்ளும் திறன் இந்தப் பாட்டுக்கு உண்டு. பாட்டு தொடங்கியதில் இருந்து முடியும் வரை அந்தக் கிறக்கம் தொடர்கிறது என்றால் அது “உண்மை வெறும் புகழ்ச்சி அல்ல”. “மைபூசி வைத்திருக்கும் கண்ணில் நீ பொய் பூசி வைத்திருப்பதென்ன” – என்ன கற்பனை!!! “மோகத்தீயும் தேகத்தீயும் தீர்த்தம் வார்த்துத் தீராது” – அட அட!!! ஹரிசரணின் முன்னேற்றம் வியக்க வைக்கையில் இன்னும் மதுஸ்ரீ உச்சரிப்பில் மேம்படுவது அவசியம்!

மதிப்பு: 7


மொத்தம்: 62%

மதிப்பும் விளக்கமும்:

7 - 10: “இது பாட்டு”

6: “சூப்பர்”

5: “அட ... நல்லாருக்கே!”

4: “பலமுறை கேட்டாப் பிடிக்கலாம்”

0-3: “சுத்த திராபை”

Monday, April 16, 2007

பாட்டு எப்படி? - மாயக்கண்ணாடி

சேரனின் “தேசிய கீதம்” (இந்தப் பட்த்திற்கு வந்த எதிர்ப்பு நினைவிருக்கிறதா) பட்த்துக்குப் பிறகு மாயக்கண்ணாடியில் இளையராஜா இணைந்திருக்கிறார்! நல்ல இயக்குநர், நல்ல இசையமைப்பாளர் இருவரும் இணைகையில் நல்ல பாடல்களன்றி வேறென்ன வர இயலும்? ஆனால் இருவருக்குள்ளும் ஓடும் ஒத்த நினைவுகள் மட்டுமே காலத்தால் அழியாத கானங்களைத் தர முடியும். இந்தப் பட்த்தில் பாடல்கள் மோசம் என்று சொல்ல முடியவில்லைதான். ஆனால் 80-90களில் இசைஞானியின் பாடல்களில் இருந்த ஈர்ப்பைத் தேடினால் ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. எப்படியும் பின்னணி இசையில் பிரித்து மேய்ந்திருப்பார் என்று நானே சமாதானம் செய்து கொள்கிறேன்.

1. காதல் இன்று இப்போது
பாடியவர்:இளையராஜா
இன்றைய காதலின் நிதர்சனத்தைச் சொல்லும் பாடல் இது. 80களில் வந்த எளிய இசை பாடலின் தரத்தைக் கூட்டுகிறது என்றால் இன்றைய காதலர்களின் ஏகோபித்த எதிர்ப்பைப் பெறும் வகையில் இருக்கின்றன பாடல் வரிகள். இன்று உண்மைக் காதல் இல்லவே இல்லை என்று சாதிக்கிறார் கவிஞர்.

மதிப்பு: 5


2. காசு கையில் இல்லாட்டா
பாடியவர்:இளையராஜா
முதல் பாடல் காதல் நிலவரத்தைப் பேச இது காசு நிலவரத்தைப் பேசுகிறது. பாடும் குரலும் உச்சரிப்பும் மட்டுமே முக்கியத்துவம் பெறும் மெட்டு இது. எளிய தபலாவும் இடையில் அங்கங்கு புல்லாங்குழலும் வர, வரிகளில் மின்னுகிறது பாட்டு. “பட்டுப் பட்டுப் படிச்சவந்தான் மற்றவர்க்குப் பாடமாகிறான்” – உண்மை இது.

மதிப்பு: 5


3. கொஞ்சம் கொஞ்சம்
பாடியவர்:கார்த்திக், ஷ்ரேயா கோஷல்
பாட்டு தொடங்கும் போது இளையராஜா “பேசிக் லவ் ஃபீல் இருந்த்தென்றால் போதும்?” என்று கேட்டுக் கொள்கிறார். சேரன் ஆமென்றதும் வரும் பாட்டில் அது இருக்கிறது. இதுவும் 90களின் மெட்டுதான். ஒரே ஒரு பீட்டு பின்னால் வர மெட்டு மட்டுமே முக்கியத்துவம் பெறும் பாட்டு கார்த்திக்கின் கம்பீரமான குரலினாலும் ஷ்ரேயாவின் இனிய உச்சரிப்பினாலும் பலம் பெறுகிறது.

மதிப்பு: 6


4. ஒரு மாயாலோகம்
பாடியவர்:திப்பு, மஞ்சரி
இதுவும் நிறைய வாத்தியக் கருவிகள் வைத்து மெட்டைச் சுகமாக்க வைக்கப் பட்ட முயற்சி. ஆனால் அவ்வளவு சுகமாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். மீண்டும் மீண்டும் கேட்டால் பிடிக்கலாம்.

மதிப்பு: 4


5. ஓ! ஏலே எங்கே வந்தே
பாடியவர்: இளையராஜா
இந்தப் பாட்டு பட்த்துக்கு எவ்வளவு முக்கியம் என்று பட்த்தைப் பார்த்த பிறகுதான் சொல்ல முடியும். இவ்வளவு ஹை பிட்ச் பாடல்களை ஏற்கனவே இளையராஜா பாடி இருந்தாலும் இனிமேல் மற்றவர்களிடம் கொடுத்து விடுதல் நலம். ஆனா நடுவில் வரும் வசன உச்சரிப்பு.. ஹா! இது அவருக்கே உரியது!!!

மதிப்பு: 4


5. உலகிலே அழகி
பாடியவர்: விஜய் ஜேசுதாஸ், நந்திதா
இந்தப் பாட்டு இளையராஜா ஸ்பெஷல். அங்கங்கு “அது ஒரு கனாக்காலம்” என்று நினைக்கத் தோன்றும் பாட்டு இது. இளையராஜாவின் மெலடி மெட்டு என்றாலே ஒரு தனித்தன்மை இருப்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம். சரணத்தில் குரல்களோடு வயலின்கள் தொடர்ந்து வருவதைக் கொஞ்சம் கேளுங்கள். சின்ன விஷயம் கூட எப்படிப் பாட்டு அமைப்பை மாற்றும் என்று தெரிய வரும்.

மதிப்பு: 6

மொத்தம்: 50%

மதிப்பும் விளக்கமும்:
7 - 10: “இது பாட்டு”
6: “சூப்பர்”
5: “அட ... நல்லாருக்கே!”
4: “பலமுறை கேட்டாப் பிடிக்கலாம்”
0-3: “சுத்த திராபை”

Tuesday, April 10, 2007

பாட்டு எப்படி? - சென்னை 600028

கங்கை அமரனின் மகன் வெங்கட் பிரபு இயக்க, யுவன் இசைக்க, ஒரு மாதிரி “குடும்ப்ப்” படம் இது. யுவன் சமீப காலமாகப் பட்டை கிளப்பும் வேகத்துக்கு இந்தப் படமும் ஒரு உந்தியாகிறது. ஒட்டுமொத்தமாக ஒரு புதிய சோதனையும் பாடல்களில் இல்லை. அதுவே ஒரு வெற்றியும் கூட!

1. நட்புக்குள்ளே

பாடியவர்:யுவன்
பாடல்: யுவன்???.
குட்டியாய் ஒரு பிட்டுப் பாட்டு. மெல்லிய மெலடி தாலாட்டுது. யுவனின் குரல் “பொய் சொல்ல” (ஏப்ரல் மாத்த்தில்) காலத்தில் இருந்து ஒரே மாதிரி இருக்குதே! நட்புப் பாட்டு -- காதல் பிரிவை விட நட்புப் பிரிவு வலி தரும் என்கிறது. இந்த்த் தளம் http://www.musicindiaonline.com/music/tamil/s/movie_name.9036/ இந்தப் பாட்டை எழுதியவர் யுவன் என்கிறது. என்னால் நம்ப முடியவில்லை.

மதிப்பு: 3

2. ஓ! ஓ! என்னென்னமோ

பாடியவர்:அனுஷ்கா
பாடல்: வாலி

அனுஷ்கா மீது அப்ப்டி என்ன நம்பிக்கையோ தெரியவில்லை. தீப்பிடித்த்துக்கு அப்புறம் பல தடவை யுவன் இசையில் பாடி விட்டார். உடம்பை “உடும்பாக்கி” இவர் படுத்தும் பாட்டில் தமிழன்னை டெல்லிக்கே ஓடுகிறாள். இதை எழுதுவதற்கு வாலி அவசியமா? ஆனால் பாட்டு மெட்டில் எந்தக் குறையும் சொல்ல முடியவில்லை. முக்கலும் முனகலும் இல்லாமல் இருந்தாலே இன்னும் சுகம் கூடியிருக்கும்.

மதிப்பு: 3

3. உன் பார்வை மேலே

பாடியவர்:விஜய் ஜேசுதாஸ்
பாடல்: வாலி
இதுவும் ஒரு மெலடியே. சின்னச் சின்ன பீட்டுகளுக்கு நடுநடுவே மேற்கத்திய இசை வடிவங்கள்! இது யுவனுக்குப் பழக்கமானதுதான். கேட்க்க் கேட்கப் பிடித்துப் போகும் மெட்டு இது. வாலியின் வரிகள் பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை.

மதிப்பு: 5

4. வாழ்க்கையில் யோசிங்கடா (ஜல்ஸா)

பாடியவர்: ஹரிசரண், ரஞ்சித், கார்த்திக், பிரேம்ஜி, திப்பு
பாடல்: கங்கை அமரன்
ரொம்ப நாளைக்கப்புறம் கங்கை அமரன் மகன் பட்த்தில் பாட்டு எழுத வந்து விட்டார். கானா மெட்டில் தாளம் போட வைக்கும் மேற்கத்திய இசையை உள் நுழைக்கும் முயற்சி. பரவாயில்லை.

மதிப்பு: 4

5. வாழ்க்கையில் யோசிங்கடா (ஜல்ஸா)

பாடியவர்: ‘கானா’ பழனி, ‘கானா’ உலகநாதன், கருணாஸ், பிரேம்ஜி,சபேஷ்
பாடல்: கங்கை அமரன்

ஒரே மெட்டு என்பதால் மேற்கண்ட கருத்துகள் இதற்கும் செல்லுபடியாகும். ஆயின், சரியான கானா மெட்டு என்பதால் இதைப் பாடியவர்களுக்குச் சாலப் பொருத்தம்.

மதிப்பு: 4

6. வேர்ல்டு கப்பு ஜெயிக்க

பாடியவர்: யுவன், டி ஜே ஃபங்க்கி சத்யா
பாடல்: வாலி
நம்ம வேர்ல்டு கப்புக் கனவுகளே கானலாப் போனதுக்கப்புறம் சென்னை 28-ல் இருந்து கூட வேர்ல்டு கப்பு வெளையாடப் போகலாம். இந்தப் பாட்டில் இயல்பாகவே உள்ள துள்ளல் எல்லாரையும் தொற்றும். வாலியின் வரிகளில் வீடு தோறும் ச்ச்சின் திராவிட்டைத் தேடுகிறார்கள். யுவனுக்கு ஏற்ற பாடல் இது. ஆனால் ஏன் எப்போது பார்த்தாலும் யாரோ கத்தியால் குத்தியது போன்றே பாடுகிறார் என்றுதான் புரியவில்லை.

மதிப்பு: 5

7. யாரோ யாருக்குள் (நட்பு)

பாடியவர்: எஸ் பி சரண், வெங்கட் பிரபு
பாடல்: வாலி
ஹ்ம்ம்… ஒன்றுமே தேறாதோ என்ற வேளையில் வராது வந்த மாமணியாய் இந்தப் பாட்டு. நட்பின் பெருமையைப் பிற பாடல்கள் போலேதான் இதுவும் கையில் எடுத்திருக்கிறது. ஆனால் தாளம் போட வைக்கும் பின்னணி இசை யுவனின் இருப்பைக் கட்டியம் கூறுகிறது. சரணுக்கு சிறப்புப் பாராட்டுகள்.

மதிப்பு: 7

8. யாரோ யாருக்குள் (காதல்)

பாடியவர்: சித்ரா, எஸ் பி பாலசுப்பிரமணியம்
பாடல்: வாலி
அனேகமாகத் தமிழில் சித்ரா யுவனுக்குப் பாடிய முதல் பாடல் இதுதான். பாலசுப்பிரமணியத்துக்கும் சித்ராவுக்கும் அனுபவம் துணை கொடுக்கப் பின்னணியில் யுவனின் வயலின்கள் சிறக்க, வாலியின் வரிகள் காற்றில் கரையும் கற்பூரம் போல் இல்லை காதல் என்கின்றன. உண்மை! இந்தப் பாட்டும் அப்படித்தான். இது ஒரு இனிய அனுபவம்.

மதிப்பு: 7

மொத்தம்: 48%

பாட்டு எப்படி? - சிவாஜி

ஷங்கர் இல்லாமல் ரகுமான் வெல்ல முடியும் என்று வெகு நாட்களுக்கு முன்பே நிரூபித்திருந்தார். அதே போல் ரகுமான் இல்லாமலும் ஷங்கர் வெல்ல முடியும் என்று “அன்னியன்” நிரூபித்து விட்டது. இந்நிலையில் ரஜினி-ஷங்கர்-ரகுமான்-ஏ வி எம் என ஒரு மெகா கூட்டணிப் படம் அதீத எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியதில் வியப்பேதும் இல்லை. இதற்கு முன் ரஜினி படங்களுக்கு ரகுமான் இசையமைத்தபோது பாடல்கள் ஹிட் ஆனாலும் ஒரு சிறு குறை இருந்து கொண்டே இருந்த்து. அது இப்போது நிவர்த்தி செய்யப் படுமா என்ற கேள்வி எழுகிறது. மொத்த்தில் யார் படமென்ற கேள்வி இல்லாமல் ஷங்கர் இயக்கும் ரஜினி பட்த்தில் ரகுமான் பாடல்கள் எப்படி என்ற எதிர்பார்ப்புதான் எனக்கு இருந்த்து. அது பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாகவே நான் கருதுகிறேன்

1. தீம் இசை
முதலில் கேட்ட்து இதைத்தான். இதை வைத்துப் படம் பப்படம் என்ற முடிவுக்கே வந்திருந்தேன்.
மதிப்பு: 3

2. வாடா வாடா
பாடியவர்:பிளாஸி, நரேஷ் ஐயர், ரக்வீப் ஆலம்.
பாடல்: நா. முத்துக்குமார், பிளாஸி (ஆங்கிலம்)
தீம் இசை பாடாவதியாக இருந்த்தாலோ என்னவோ புதிதாக ஒரு தீம் பாடலைப் போட்டிருக்கிறார் ரகுமான். பாடல் முழுவதும் பஞ்சு (அதாங்க பஞ்ச்) பறக்கிறது. பிளாஸியின் வார்த்தைகளும் நா. முத்துக்குமாரின் வார்த்தைகளும் பஞ்சு பஞ்சாய்ப் பறக்கின்றன! மற்றபடி குறிப்பிட்டுச் சொல்ல ஒரு மண்ணும் இல்லை!

மதிப்பு: 4

3. சூரியனும் சந்திரனும்

பாடியவர்: பாலசுப்பிரமணியம், ரெஹானா, பென்னி.
பாடல்: நா. முத்துக்குமார்
பாலசுப்பிரமணியத்துக்கு அல்வா சாப்பிடும் பாடல். சும்மா ஹை பிட்சில் பின்னி எடுக்கிறார். ரஜினியின் அறிமுகப் பாடலாக இதுதான் இருக்க வேண்டும். ஷங்கரின் பிரம்மாண்ட்த்தை இப்போதே எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். நா. முத்துக்குமாரின் வார்த்தை ஜாலம் கலக்க, சும்மா பீட்டுகளில் பெண்டு எடுத்திருக்கிறார் ரகுமான்! ரெஹானாவை இனிப் பாடாமல் அல்ல பேசாமல் கூட இருக்கச் சொல்வது நலம். இப்பவும் எப்பவும் பல்லேலக்கா!

மதிப்பு: 6

4. வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி
பாடியவர்: ஹரிஹரன், மதுஸ்ரீ
பாடல்: வைரமுத்து
இதுவும் ஒரு மெல்லிய பீட்டுப் பாட்டு. ரகுமான் எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் வயலின்களையும் டிரம்ஸையும் வைத்துப் பாட்டு முழுக்க வித்தை காட்டுகிறார். ஹரிஹரனைப் பற்றிப் புதிதாகச் சொல்ல ஒன்றுமில்லை. மதுஸ்ரீயின் உச்சரிப்பு நாளுக்கு நாள் மேற்படுவது குறித்து மகிழ்ச்சி!
ஆம்பல், மௌவல் – எனச் சங்க காலப் பூக்களை இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்கிறார் வைரமுத்து. அத்தோடு “பெண்களிடம் சொல்வது குறைவு செய்வது அதிகம்” என்கிறார். அது ரஜினிக்கு மற்றவர்களிடம் இல்லையா என்ன?
மதிப்பு: 6

5. சஹானா சாரல்
பாடியவர்:உதித் நாராயண், சின்மயி
பாடல்: வைரமுத்து.
ஒரு பாட்டு நச்சக்கென்று மனதில் போய்த் தைப்பதற்கு பல்லவியின் மெட்டு முக்கியப் பங்கு வகிக்கிறது. இப்பாடலின் பல்லவி சும்மா ஒற்றைக் கம்பிப் பத்த்தில் வழியும் தேனைப் போல் இருக்கையில் நெஞ்சில் தங்க வலிக்கிறதா என்ன? நடுவில் வரும் ரகுமானின் ஜதி இன்னொரு சுகம். என் தினம் சில காலம் இப்பாடலில் துவங்கும். உதித்துக்குத் தமிழை “உதிர்த்த நாராயண்” என்று ஒரு பெரும் பெயர் உண்டு. அதைப் போக்க சின்மயியுடன் இணைந்து தவம் இயற்றி இருக்கிறார். ஓராயிரம் ஆண்டுகள் சேமித்து நூறாயிரம் ஆண்டுகள் வாழும் காதல் என வழக்கம் போல் உயர்வு நவிற்சியில் விளையாடி இருக்கிறார் வைரமுத்து. இத்திரையின் சிறந்த பாடல் இது!
மதிப்பு: 7

6. அதிரடிக் காலம்
பாடியவர்:ரகுமான், சயனோரா.
பாடல்: வாலி.
ஒரு ஹீரோயிசப் பாட்டுக்குத் தேவையான எல்லாமே குறைவரக் கிடைக்கும் பாடல் இது. பல்லேலக்காவும் இதுவும்தான் முதலில் இளசுகளின் நெஞ்சைத் தைக்கப் போகின்றன. ரகுமானுக்கு ஸ்பெஷாலிட்டியான ஹை பிட்ச் பாட்டு. ஆனாலும் எங்கேயோ கேட்ட மாதிரியே இருக்கே, அதான் பிரச்சினை!
“இவன் பில்லா ரங்கா பாட்ஷாதான்
இவன் பிஸ்டல் பேசும் பேஷாதான்” – வரிகள் சொல்லவில்லையா வாலியென்று?!
மதிப்பு: 6

6. ஒரு கூடை சன்லைட்
பாடியவர்:ராக்ஸ், தன்வி, பிளாஸி, சுரேஷ் பீட்டர்ஸ்.
பாடல்: பா. விஜய்.
பச்சைத் தமிழனும் வெள்ளைத் தமிழனும் கலந்து கட்டும் இந்தப் பாட்டு ரகுமானின் ஆரம்பகால இஸ்டைல்… இன்று கேட்கும் போது என்னமோ உறுத்துகிறது. சுரேஷ் பீட்டர்ஸ் எங்கே போனார் இத்தனை நாட்களாக? என் கணிப்பு சரியாக இருக்குமானால் ரஜினி ராம்ப் வாக் போகத்தான் இந்தப் பாட்டு சரிப்படும்!
வித்தக்க் கவிஞர் இப்போதெல்லாம் ஆங்கில வித்தைதான் காட்டுகிறார். இப்பாடலில் எத்தனை தமிழ் வார்த்தைகள் என்று சொல்வோருக்கு (நடிகர் திலகம்) சிவாஜி போட்ட கோட்டு பரிசு! முதல்ல வார்த்தைகள் எங்கே என்று லேட்டரலாக்க் கேள்வி கேட்பவருக்கு முதல் பரிசு!
மதிப்பு: 4

7. சஹாரா பூக்கள்
பாடியவர்:விஜய் ஜேசுதாஸ், கோமதிஸ்ரீ.
பாடல்: வைரமுத்து.
ஜம்முன்னு ஒரு பாட்டு ரகுமான் போட்டவுடன் ஷங்கருக்கு மனதில் மின்னலடித்து இன்னொரு வெர்ஷன் வாங்கி வைத்துவிட்டார்! இதற்கு முந்திய உதாரணம் – குறுக்குச் சிறுத்தவளே. எவ்வித்த்திலும் சோடை போகாத பாட்டு இது. விஜய் அருமையாகப் பாடி இருக்கிறார். முன்பெல்லாம் கல்யாணி மேன்ன் (குலுவாலிலே, அலைபாயுதே) பாடிக் கொண்டிருந்த பிட்டுகளை இப்போது புதிதாக கோமதிஸ்ரீ பாடுகிறார். நன்றாகவே இருக்கிறது.
மதிப்பு: 7

மொத்தம்: 53%

Wednesday, February 28, 2007

சிதம்பர ஜாலம் - பலிக்கவில்லை

நிதிநிலை அறிக்கையை முழுமையாகக் கண்டேன். ரசித்தேன்.

பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சமீபத்திய மூன்று தேர்தல்களில் இரண்டில் காங்கிரஸை மண் கவ்வ வைத்த ஜோரில் தயாராக இருந்தார்கள். அத்தோடு குவாத்ரோச்சி வேறு அவர்களுக்கு ரகசிய உற்சாகம் அளித்து வந்தாரல்லவா? அவ்வப்போது அந்த உற்சாகம் சத்தமாக வெடித்து சபாநாயகர் கெஞ்சலாகவும் கொஞ்சலாகவும் அதட்டலாகவும் அடக்க வேண்டி வந்தது. சோனியாவும் மன்மோகனும் அதைவிடப் பெரிய ஆச்சரியமாக அத்வானியும் வாய்மூடி மௌனிகளாக நிதிநிலை அறிக்கை முழுவதும் இருந்தனர். வாஜ்பாயைக் காணவில்லை.

ஆயிரங்கோடிக்கணக்கில் வரி போட்டார், ஆயிரங்கோடிக்கணக்கில் வரி எடுத்தார் ... அதற்கெல்லாம் அசராத பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாய் மற்றும் பூனை உணவுகளுக்கு வரிவிலக்கு என்றதும் கொதித்து எழுந்தார்கள். எப்போதுமே இப்படி ஒரு அஸ்திரத்தை வைத்து அவர்களைத் திசை திருப்புவதை சிதம்பரம் ஒரு கலையாகவே வைத்திருக்கிறார்.

இன்னொரு விஷயம் அவ்வப்போது ஆளுங்கட்சித் தரப்பில் இருந்து எழுந்த கூச்சல்களை சும்மா "ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்" என்று சிதம்பரமே அடக்கினார். சோனியா மர்மமான புன்னகையுடன் அதைப் பார்த்திருந்தார்.

பட்ஜெட்டில் மாதச் சம்பளம் வாங்குவோருக்குப் பெரிய மாற்றமில்லை. ஒரு பக்கம் 1000 ரூ. வரிவிலக்கு அளித்துவிட்டு இன்னொரு பக்கம் 1% அதிக சர்சார்ஜ் ஏற்றி விட்டார் சிதம்பரம். இந்த 1% உயர்நிலை மற்றும் மேல்நிலை கல்விக்கானது என்று அறிவித்திருக்கிறார். ஏற்கனவே பாலர் கல்விக்கான 2% இன்னும் தொடரும். இதை யாராலும் மறுத்துப் பேச இயலாது. எப்படிப் பார்த்தாலும் உங்கள் வரி ஒரு பைசா கூடக் குறையாது. அதிகரிக்க மட்டுமே செய்யும்.

விவசாய அறிவிப்புகள் தவிர சிதம்பரத்தின் முழு நோக்கமும் விலைவாசி மற்றும் பண வீக்கத்தைக் கட்டுப் படுத்துவதில் மட்டுமே இருந்தது. பெட்ரோல் டீசல் விலைக் குறைப்பால் எண்ணெய்க் கம்பெனிகளின் நஷ்டத்தை ஈடு கட்டக் கூட ஒரு சிறு திட்டம் வைத்திருக்கிறார். தேயிலை, காப்பி மற்றும் தென்னை மறுபயிருக்கு வேறு வரிவிலக்கு அளித்திருக்கிறார்.

வாட் வரிகளும் பல பொருட்களுக்குக் குறைக்கப் பட்டு இருக்கின்றன.

தொலைத் தொடர்பு வரிகளை ஒருமுகப் படுத்த ஒரு திட்டத்தைத் தொலைத் தொடர்பு அமைச்சகம் அளிக்கும்.சிறப்பாகச் செயல்பட்டமைக்காக இந்தியத் தொழில்நுட்பக் கல்லூரி (ITI) களுக்கு சிறப்புச் சலுகைகளும் இரண்டு வேளாண் பல்கலைக் கழகங்களுக்கு (அதில் ஒன்று கோவையில்) சிறப்பு நிதியாக ரூ. 50 கோடியும் அளித்திருக்கிறார்.

எனக்கு அனைத்து அம்சங்களிலும் மிகப் பிடித்தது ஊனமுற்றோருக்கான வேலை வாய்ப்பு. எந்த ஒரு ஊனமுற்றோருக்கு நிரந்தர வேலை அளிக்கும் நிறுவனத்திற்கும் பரிசாக நிறுவனத்தின் சார்பாக அவருக்கு அளிக்க வேண்டிய நிரந்தர வைப்பு நிதியை மூன்று வருடங்களுக்கு அரசாங்கமே அளிக்கும் என்றார். அதிலும் சிறப்பு இது மாதம் ரூ. 25000 சம்பாதிப்பவர் வரைக்கும் பொருந்தும்... யாரும் ஏமாற்றாத வகையில் பயந்தரும் நல்ல திட்டம். வாழ்க!


ராணுவ நிதியாக 96000 கோடி ரூபாய் வழங்கப்பட்டு பாஜக வாய் அடைக்கப் பட்டிருக்கிறது.

மற்றவை எல்லாம் ஒன்றும் அவ்வளவு பெரிதாகச் சொல்லக் கூடிய ஒன்றுமில்லை. பங்குச்சந்தை காலங்கார்த்தாலேயே 500 புள்ளிகள் கம்மியாகத் தொடங்கியது. சேவை வரி வலை பெரிதாக்கப் பட்டதும் பெரிதாக வரிச் சலுகைகள் இல்லாமல் போனதும் தலைகீழாக ஆக்கி விட்டன. கடைசியாகப் பார்த்தபோது ஒரு 350 புள்ளிகள் டைவ் அடித்திருந்தது.