Wednesday, November 29, 2006

சிவப்பதிகாரம் - தலையெழுத்து

ரொம்ப நாள் கழிச்சு பெங்களூர் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு படம் பார்க்கலாமேன்னு நினைச்சோம். அங்ஙன புடிச்சுதுய்யா காலச் சனி. கொள்ளக் காசு குடுத்து அந்தா இந்தான்னு கஷ்டப்பாடு பட்டு நம்ம நண்பர் செல்வன் சீட்டு வாங்கிப்பிட்டாரு. நல்லாத் தின்னுப்புட்டு எல்லாருமா போயி ஒக்காந்துட்டோம். முதல்ல இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கான விவரணப் படம் ஒண்ணு ஓடுச்சு. சரி, ரொம்ப நாளாயிப்போச்சு, இந்த மத்தியத் திரைப்படக் கழகத்துல இருந்து திரையரங்குகளில் இதைப் போடச் சொல்லிருக்காக போலன்னு நினைச்சோம். அதிலயும் பெங்களூர் தியேட்டர்ல எதுக்கு தமிழில போடுறான்னு யோசிக்கலை... நம்மதேன் சினிமான்னா வாய்க்குள்ள கொசு போயிக் குடும்பம் நடத்திப் புள்ள குட்டி பெத்து பேரம்பேத்தி பாத்துட்டு வெளிய பாடையில வர வரைக்கும் தொறந்து வச்சுருப்போமே! சரி விஷயத்துக்கு வருவோம். அதுதேன் படத்தின் ஆரம்பம்.

நாட்டுக்கு நல்லது நடக்க (?!) புரபசர் ரகுவரன் (மறு வரவு கொடுத்திருக்காரு... பாவம்!) மூலமா தேர்தல் கருத்துக் கணிப்பு நடத்துங்கப்போய்ங்கறாரு இயக்குநரு! நம்ம விஷால் படிக்கிற காலேசுல கருத்துக் கணிப்பு நடத்துனதால சில அரசியல்வாதிக பாதிக்கப் படுறாக! அப்புறம் என்ன? சின்ன ரோல்ல வந்த மணிவண்ணனும் (நல்ல வேளை) சில பல மாணவர்களும் கொல்லப் படுறாக. வேற வழியில்லாம பாரதிதாசன் பாட்டைப் பாடிக்கிட்டே ரமணா ஸ்டைல்ல விஷால் வரிசையாக் கொலை பண்றாரு. அப்புறம் அட்வைஸ் பண்றாரு (இதுக்குப் பதிலா கொலை தேவலாங்கறீங்களா? அதுவுஞ் சரிதேன்) அப்புறம் “ஏதாச்சும் பண்ணனும்”னு (இதுக்கு அப்புறம் வரேன்) படத்தை முடிச்சுப்புடுறாக!

விஷால் ஹீரோவா சண்டைக் காட்சிகளில் ஓகேதான்! ஆனா அந்தத் தமிழு அவரு வாயில படுற பாடு பாருங்க, இப்ப மகளிர் மசோதா பாராளுமன்றத்துல படுற பாட்டை விடப் பெரிய பாடு! அதிலயும் என்ன நினைச்சாரோ வசனகர்த்தா (கரு. பழநியப்பந்தேன்)! ஏற்கனவே கூட்ஸூ வண்டி மாதிரி கொள்ள நீள வசனம்! அதை அவரு படுத்துற பாட்டைப் பாத்தா எனக்கு கொலை நடுங்கிருச்சு!

கதாநாயகி (கதை எங்ஙன இருக்குங்கறீகளா, அதுவுஞ் சரிதேன்) அருமையா வந்துருக்காக! வராக, போறாக, ஆடுறாக, பாடுறாக – கடைசியில ஓடுறாக! இதுக்கு மேல என்ன வேலைங்கறீகளா, அதுவுஞ் சரிதேன்!

படத்தோட உண்மையான கதைநாயகன் (நன்றி: தங்கர்) நம்ம கஞ்சாக் கருப்புதேன்! “யாரு மனசுல யாரு”ன்னு கலாய்க்கிறது ஆகட்டும், “அஞ்சு வருசம், அஞ்சு பாடத்துல, அஞ்சஞ்சு தடவை அரியர்ஸ் வைக்கிறது தப்பா?” ன்னு பின்றது (நடுவுல முடிய வேற முன்னாடி இழுத்து விட்டுக்கிறாரு) ஆகட்டும்! தொப்பியைத் தூக்கிட்டேன் கஞ்சா!

சொரணையே இல்லாத கதைக்குப் பின்னணி இசை ஒரு கேடான்னு நினைச்சிருக்காரு வித்யாசாகர்! தப்பில்லைங்க! ஆனா பாட்டுகளில தான் யாருன்னு காட்டியிருக்காப்புல! அற்றைத் திங்கள் பாட்டு சொக்குதுன்னா மன்னார்குடி கலகலக்குது! ஆனாப் பாட்டு எடுத்த விதம் இருக்கு பாருங்க! நானே நொந்து நூடுல்ஸாகிட்டேன்! அதிலயும் அந்தக் கரகாட்டப் பாட்டுக்கு ஏதோ ஒரு டுபுக்கு டான்ஸரையும் ஷர்மிலியையும் (ஏய்யா இயக்குநரே! மனசாட்சிய விடுங்க, உங்களுக்கு மனசுன்னு ஒண்ணு இருக்கா?) ஆட விட்டது இருக்கு பாருங்க... சரி ஒண்ணும் பிரயோசனம் இல்லைங்கறீங்களா, அதுவுஞ் சரிதேன்!

ஒளிப்பதிவு! இப்பல்லாம் தமிழ்நாட்டுக் காரவுகள பம்பாய் டெல்லியில இருந்தெல்லாம் பிளைட்டு சார்ஜூ குடுத்துக் கூப்பிட்டுப் படம் புடிக்கச் சொல்றாகளாம். இங்ஙன என்னடான்னா, டெக்னிகல் சமாச்சாரம் தெரியாத எனக்கே பல காட்சிகளில் ஒளிப்பதிவு பல்லிளிக்கிறது அப்பட்டமாத் தெரியுது!

படத்துக் கடைசியில ஒட்டுமொத்தமா “ஏதாச்சும் செய்யணும்”கிறாக! அதுனால தமிழ் கூறும் நல்லுலகிற்கு என்னாலான ஒரே சுனாமி எச்சரிக்கை மணி இந்தப் பதிவு! யான் பட்ட துன்பம் வேறாரும் படவேண்டா! ஏம்லே போன, அது ஒந்தலையெழுத்துங்கறீகளா, அதுவுஞ் சரிதேன்!