Tuesday, July 18, 2006

கலைஞர்-ஜெ-வாஸ்து-காமெடி!!!

இன்றைய காமெடி!!!

நான் வேறு எதுவும் சொல்லத் தேவையில்லை! இந்த அறிக்கையே சொல்லும்!!! முழுசாப் படிச்சு எஞ்சாய் பண்ணுங்க!

அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-


தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நடவடிக்கைகள் தலைமைச் செயலக வளாகத்தினுள் பாரம்பரியம் உள்ள இடத்தில் அமைந்திருப்பது அனைவரும் அறிந்ததே. மேற்படி சட்டமன்றப் பேரவை வளாகமும், அதன் அமைப்பும், ஒரு வரலாற்றுப் பின்னணி கொண்டதாகும். இந்திய விடுதலைக்குப் பிறகு 1952-ம் வருடத்தில் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அந்த காலத்திலிருந்து நான் முதல்-அமைச்சராக இருந்த வரை தமிழக சட்டமன்றப் பேரவை மேற்படி இடத்தில் தான் நடைபெற்று வந்தது. இடைப்பட்ட காலத்தில் ஊட்டியில் நடைபெற்ற ஒரு தொடர் மற்றும் மராமத்துப் பணிகள் மேற்கொண்ட போது, இப்போது கலைவாணர் அரங்கம் என்று சொல்லப்படும் இடத்தில் ஒரு சில தொடர்கள் நடைபெற்றதைத் தவிர, மற்ற அனைத்து சந்தர்ப்பங்களிலும் தமிழக சட்டமன்றப் பேரவையின் கூட்டம் மேற்படி வளாகத்தில் தான் நடைபெற்று வந்தது.

தமிழ்நாட்டு மக்களுக்கு வேண்டிய நல்ல திட்டங்கள் அனைத்தும் அங்கிருந்து தான் வெளிப்படுத்தப்பட்டது. எத்தனையோ தலைவர்கள், உதாரணமாக காமராஜ், அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோர் அந்த சட்டமன்ற பேரவையில் தான் உரையாற்றி இருக்கிறார்கள். முதல்-அமைச்சர் ஆற்றும் சட்டமன்ற பணிகளை செய்துள்ளார்கள்.

மேற்படி சட்டமன்றப் பேரவையின் இருக்கைகள் மிகவும் தரம் வாய்ந்த மரச் சாமான்களைக் கொண்டு தயார் செய்யப்பட்டு கடந்த 55 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்களையும், முதல்-அமைச்சர்களையும் தன்னகத்தே கொண்டு இயங்கி வந்து இருக்கின்றது.
இவ்வளவு பெருமை வாய்ந்த தமிழக சட்டமன்றப் பேரவைக்கும் மற்றும் அதன் வளாகத்திற்கும் கருணாநிதியால் மிகப் பெரிய ஊறு இப்போது நேர்ந்துள்ளது. இதுகாறும் பின்பற்றப்பட்டு வரும் சட்டமன்ற நடைமுறையானது, முதல்-அமைச்சருக்கு எதிர்வரிசையில் அவருக்கு நேர் எதிரில் தான் எதிர்க்கட்சித் தலைவர் அமர்ந்து இருப்பார்.


முதல்-அமைச்சரை ஒட்டி அவரது வலது பக்கத்தில் மற்ற அமைச்சர்களும், அதே போல எதிர்க்கட்சித் தலைவரை ஒட்டி அவரது இடது பக்கத்தில் மற்ற கட்சித் தலைவர்களும் அமர்ந்து இருப்பார்கள். எந்த ஒரு சூடான விவாதமும், உணர்ச்சிப்பூர்வமான விவாதமும், அனைத்து தரப்பினரும் வெளிப்படுத்தும் உணர்ச்சிகளையும் எடுத்துச் சொல்லும் பாங்கினை பார்க்கும் விதத்தில் தான் முதல்-அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் அமரும் இருக்கைகள் இதுகாறும் இருந்து வந்தன.

தற்போது அவரது உத்தரவிற்கு இணங்க தமிழக சட்டமன்றப் பேரவையில் முதல்-அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின் இருக்கைகள் மற்றும் மேஜைகள் ஆகியவை முற்றிலும் மாற்றப்பட்டுள்ளன.
காலம் காலமாக இதுவரை இருந்த தன்மையினை மாற்றி, தற்போது முதல்-அமைச்சர் உட்காரும் இடம் பேரவைத் தலைவரின் வலது புறத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது என்றும், முதல்-அமைச்சர் அமர்ந்திருப்பதை பார்க்க முடியாத வகையில் பேரவைத் தலைவரின் இருக்கையால் மறைக்கப்பட்டு அந்த இருக்கைக்கு இடது புறத்தில் எதிர்க்கட்சித் தலைவரின் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிய வந்துள்ளது.

அதாவது, முதல்-அமைச்சரை எதிர்க்கட்சியில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள உறுப்பினர்கள் பார்க்க இயலாது. அதே போல ஆளும் கட்சித் தரப்பில், எதிர்க்கட்சித் தலைவரையும் மற்றும் குறிப்பிட்ட பகுதியில் உள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் பார்க்க இயலாது.

கருணாநிதி இவ்வாறு இருக்கைகளை மாற்றியதற்கு என்ன விளக்கம் தர இருக்கிறார்? எனக்குக் கிடைத்த தகவல்படி வாஸ்து சாஸ்திரத்தின் முழுப்பிடியில் கருணாநிதி தற்போது சிக்கியுள்ளார்.

முதல்-அமைச்சர் அறையிலும் கருணாநிதி அமர்ந்து அதிகம் பணியாற்றுவது இல்லை. அதற்குக் காரணம் அந்த அறை அமைந்துள்ள இடம் அவருடைய ராசிப்படி சரியாக இல்லை என்றும், இதுகாறும் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்ற அறை தற்போது முதல்-அமைச்சர் பணியாற்றும் இடமாக்கப்பட்டுள்ளது என்றும், இதற்கெல்லாம் காரணம் வாஸ்து தான் என்றும் தெரிய வருகின்றது. அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் இடமும் அடியோடு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதற்கும் வாஸ்து தான் காரணம் என்றும் தெரியவருகிறது.

சட்டமன்றப் பேரவை என்பது யாருடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல. எந்த ஒரு கட்சிக்கும் சொந்தமும் அல்ல. அப்படி இருக்கும் போது யாரைக் கேட்டுக் கொண்டு இவ்வகை மாற்றங்கள் நடைபெற்றுக் கொண்டு வருகின்றன என்பதை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய கடமை முதல்-அமைச்சருக்கும், சட்டமன்றப் பேரவைத் தலைவருக்கும் உள்ளது.
எந்த ஓர் எதிர்க்கட்சித் தலைவரையும் இதுகாறும் இது குறித்து கலந்து ஆலோசனை செய்ததாக தெரியவில்லை. ஏதோ தன் வீட்டு வாசல்படி, கதவு, ஜன்னல்களை மாற்றி அமைப்பது போல் முதல்-அமைச்சரும், சட்டமன்றப் பேரவைத் தலைவரும் நடந்து கொள்வது மிகவும் வேதனையாக இருக்கிறது. இதற்காக செலவழிக்கப்படும் பெரும் பணம் வீண் தானே?

இதுவரை என்ன நடைமுறை பழக்கவழக்கமோ அதனை திரும்பக் கொண்டுவருவது தான் ஒரு சரியான தீர்வாக அமையும்.
தினசரி கொலை, கொள்ளை என்று சட்டம்-ஒழுங்கு காற்றில் பறந்து கொண்டிருக்கிறது. ஆளுங்கட்சியினரின் அராஜகம் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது. எங்கே பார்த்தாலும் மணல் கொள்ளை; கள்ளச் சாராயம் தமிழகமெங்கும் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது.
இதே வேகத்தில் சட்டமன்றப் பேரவையின் பாரம்பரியமும் குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளது. அதனுடைய வெளிப்பாடு தான் சட்டமன்றப் பேரவையில் முதல்-அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் இருக்கைகள் இடமாற்றம். நாட்டு மக்கள் இதனை தெரிந்து கொள்ள வேண்டும் சம்பந்தப்பட்டோர் இதனைத் திருத்திக் கொள்ள வேண்டும். இருக்கைகள் இடமாற்றம் மட்டுமே வாழ்க்கையை மாற்றி அமைத்து விடாது.

இதனால் மைனாரிட்டி அரசு நிலைத்து நின்று விடாது. மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும் திட்டமும், செயலாக்கமும் தான் ஓர் அரசுக்கு முக்கியம் என்பதை இனியாவது கருணாநிதி புரிந்து கொள்ள வேண்டும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.

Thursday, July 13, 2006

ஆறு பற்றி ஆறு

நம்ம சிவமுருகன் கொஞ்ச நாளைக்கு முன்னால உங்களுக்குப் புடிச்ச புடிக்காத ஆறு பத்தி எழுதுங்கன்னு கேட்டுக்கிட்டாரு. நானும் ரொம்ப யோசிக்க முடியாம, அல்லது யோசிக்கத் தெரியாம திருதிருன்னு முழிச்சுக்கிட்டு இருந்தேன். வேலை வேற கொஞ்சம் அதிகம். கடைசியா ஆறைப் பத்தியே ஆறையும் எழுதிட்டா என்னன்னு தோணிச்சு.

தமிழில் ஆறு என்னும் சொல் பல வகையான பொருள்களில் வழங்கப் படுகிறது. அதில் ஒரு ஆறு அர்த்தங்களை, அதாவது பொருட்களை எடுத்துக்கிட்டு சின்னச் சின்னதா வார்த்தைக் கோவைகள் (இதை நான் கவிதைன்னு சொல்லப் போயி நிஜமாவே கவிதை எழுதுறவங்க அடிக்க வந்துட்டா என்ன செய்யிறது? :) ) போட்டிருக்கேன். படிச்சுப் பார்த்து நல்லாருக்கான்னு சொல்லுங்க.

ஒன்று:

இது அனைவருக்கும் தெரிந்தது எண் 6! இந்த ஆறோட வடிவைப் பாத்தாலே எனக்கு என்ன தோணுதுங்கறதுதான் கீழே இருக்கு!

எண்களில் உனக்கு மட்டும்
அப்படியென்ன சோகம்?
வடிவே கயிறாய்!


இரண்டு:

நதி! நம்ம ஊருல ஆறுகள் ஒரு காலத்துல பாய்ந்தோடிக் கொண்டுதான் இருந்ததாம். ஏதோ ஒரு பழைய புத்தகத்துல ஆறுங்கறதுக்கு வழின்னு இன்னொரு பொருள் இருப்பதற்குக் காரணமே நதிகளின் அடையாளங்கள்தான்னு சொல்லிருந்தாங்க. ஆனாப் பாருங்க, இப்பப் பல நதிகளை இங்ஙனதேன் இருந்துச்சுன்னு அகழ்வாராய்ச்சிக்காரவுக மாதிரி சொல்றது மனசு வலிக்குது. எங்க ஊரு மதுரையில அழகர் ஆத்துல எறங்குறதுக்கு ஒரு காலத்துல லாரியில தண்ணி கொண்டு வந்து ஊத்துனாக! அங்ஙன ஆத்துக்குள்ள பம்பு போட்டு ஓடுதண்ணின்னு பேரும் வச்சுருக்காக! ஒரு காலத்துல ஆத்துத் தண்ணி ஊத்தாப் போயி இப்ப அந்த ஆத்துக்கே தண்ணி குடுக்குது!

தாய்க்குப் பாலூட்டும் மகள்!
வைகை ஆற்றில் அல்ல ஊற்றில்
இறங்குகிறார் அழகர்!


மூன்று:
தமிழில் ஆறு என்பதற்கு இன்னொரு முக்கியமான பொருள் வழி! வழி என்பதற்கு உபாயம் என்றும் பொருள் கொள்ளலாம்! அதாவது ஒரு செயலைச் செய்யும் வழி! இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல் என்றார் வள்ளுவர். இன்றைக்குப் பற்றி எரிந்தாலும் மாட்டராஸியைக் கொண்டாடுபவர்களும் இருக்கிறார்கள்.

கொஞ்சம் பற்றவைத்து
நெஞ்சில் முட்டுப்பட்டும்
துஞ்சாத வெற்றி!
- இது மாட்டராஸி ஆறு



நான்கு:

ஆறு என்ற சொல் தமிழில் “அந்த விதமாக” என்று பொருள்படும் பெயரெச்ச விகுதியாகவும் பயன்படுகிறது. முன்பெல்லாம் சினிமாவில் கூட “விதி” துவங்கி “சேது” வரையில் காதல் கனவான்கள் தங்கள் காதலிகளை வளைக்கும் விதங்கள் பல வகை! அதில் என் நண்பன் ஒருவன் கல்லூரிக் காலத்தில் பின்பற்றிய டெக்னிக், பரிதாபம்! காதல் பிச்சை கேட்கலாம், ஆனால் காதலைப் பிச்சை கேட்டால் என்ன நடக்கும்?

கண்கள் கலங்குமாறு
கேட்டான் இதயம் வழங்குமாறு
உள்ளக்கிடக்கை விளக்குமாறு
வந்தது விளக்குமாறு!

ஐந்து:

இன்னொரு முக்கியமான பயன்பாடு – “சூடு தணித்தல்”. நமக்கு உண்பதற்கு எல்லாமே சூடாக இருந்தால்தான் பிடிக்கும். எங்க ஊர்ல பிரேமவிலாஸ்னு ஒரு அல்வாக்கடை ரொம்ப பேமஸ்! எங்க தாத்தா காலத்துல இருந்து அங்க அல்வா விக்கிறாங்க. அப்பல்லாம் பொட்டலம் வாங்குபவர்களை விட அங்கேயே போய் சுடச்சுட அல்வாவை விரும்பி உண்பவர்கள்தான் அதிகம். தொன்னையில சூடா நெய் மணக்க அல்வா, கூடவே கொஞ்சம் காராச்சேவு! அடடா! இப்பயும் நாக்கு ஊறுது. அங்ஙன அந்தக் காலத்துல ரெண்டு மணிக்குத் தொடங்கி அரை மணி நேரத்துல அத்தனையும் வித்துருமாம். அல்வா ஆறி யாரும் பார்த்ததில்லை!

பிரேமவிலாஸ் வாசலில்
ஆரும் கண்டதில்லை
ஆறும் அல்வா!


ஆறு:

கடைசியாக நான் எடுத்துக் கொள்ளும் பொருள் “மன அமைதி அடைதல்”. இன்றைய சூழ்நிலையில் மன அமைதி என்பது பல பொருள் கொண்டதாக மாறிவிட்டது. பம்பாய் குண்டு வெடிப்பைப் பார்த்தபோது வருத்தம் இருந்தது. ஆனால் தலைவர்களின் போக்கும் பேச்சையும் கேட்ட போது எனக்குத் தோன்றியது இதுதான்.

ஆறு மனமே ஆறு!
தாலியறுத்தவன்
மீண்டும் வருவான்!
தலைவர்கள் மீண்டும்
நீ மீண்டு வந்தமைக்கு
வாழ்த்துவார்கள்!
ஆறு மனமே ஆறு!

இன்னும் கூட சில அர்த்தங்கள் இருக்கின்றன. அதையெல்லாம் எழுதிட்டா ஆறுக்கு மேல போயிருமேன்னு விட்டு வச்சுருக்கேன்… என்னங்கறீங்க?