Thursday, December 13, 2012

வாழ்க்கைச் சக்கரம்


கல்லூரிக் காலங்களில் எனக்குள் இருந்த ஒரு கவிஞனின் (?) முத்துக்கள் எங்கோ தேடியபோது கிடைத்தது. கிடைத்ததை உடனே பகிர்வதுதானே தமிழனின் தனிப்பண்பு? அதற்காகவும் இது போன்ற பொக்கிஷங்களைப் பாதுகாத்து வைத்தால் பிற்கால சந்ததியினருக்கு இப்படி ஒரு தலைமுறை வாழ்ந்தது என்ற பெருமை நினைவுக்கு வரும் என்பதற்காகவும் வலைப்பூவில் ஏற்றுகிறேன்.  பைதிவே மேற்கண்டது pun intented :)

என்னால் இயன்ற அளவு ஒரு அக வாழ்க்கையின் நிகழ்வுகளைக் கோர்த்து ஒரு சக்கரமாக்கி இருக்கிறேன். காதல் போன்ற மென்மையான உணர்வுகளைக் கொச்சைப் படுத்துவது இதன் நோக்கமல்ல. என் வாழ்வில் கண்ட ஒரு உண்மை நிகழ்வு! இந்தக் கவிதை(?!)யை கடைசி வரியிலிருந்து மீண்டும் படித்தாலும் அதே உணர்வு வரும் என்று நினைக்கிறேன்.

காதலி ஆடினாள்
காதலன் ஆடிப்போனான்

காதலன் ஆடினான்
காதலும் சேர்ந்து கொண்டாடியது

காதல் உலகறியக் கொண்டாடியது
மணம் மனம் சேர்த்தாடியது

மனம் மணம் சேர்த்தாடியது
இரவு பகலென்று கணவன் ஆடினான்

கணவன் தினமும் ஆடினான்
கூடக் குழந்தையும் கூத்தாடியது

குழந்தை கூத்தாடியது
குடும்பப் பிணக்குகளும் கூத்தாடின

குடும்பப் பிணக்குகள் ஆடின
வாழ்க்கை வழக்குப்படி ஏறி ஆடியது

வழக்கு வீதியேறி ஆடியது
தம்பதியினர் தனித்தனியே ஆடினர்

தம்பதியினர் தனித்தனியே ஆடினர்
குழந்தை தன்னந்தனியே ஆடியது

குழந்தை தன்னந்தனியே ஆடியது
மனைவி குழந்தையோடு ஓடியாடினாள்

மனைவி குழந்தையோடு ஓடினாள்
கணவன் புதுக் காதலனாகிக் கலவியாடினான்

கணவன் புதுக் கலவி ஆடினான்
காதலி ஆடினாள்!

Friday, May 11, 2012

ரசித்ததில் ருசித்தவை - என்னுள்ளே என்னுள்ளே

பாடல்கள் பலவிதம்.  சில பாடல்கள் கேட்ட உடனே பிடிக்கும்; ஆனால் போகப் போகப் பிடிக்காது.  சில பாடல்கள் முதலில் பிடிக்காது.  ஆனால் போகப் போக ரொம்ப பிடிக்கும். சில பாடல்களைக் காட்சியோடு சேர்ந்து பார்த்தால் பிடிக்கும், சிலவற்றை காதால் கேட்டால் மட்டுமே பிடிக்கும்.

ஆனால் சில பாடல்கள் மட்டும்தான் கேட்ட முதல் வினாடியில் இருந்து அப்படியே உள்ளே போய் உயிரில் கலந்து விடும்.   எல்லா பாடல்களுக்கும் இது சாத்தியம் இல்லை.  குறிப்பாக இசை, குரல், பாடல் என எல்லாமே சேர்ந்து இசையும் இசை வெள்ளம் மட்டும்தான் ஏதோ ஒரு அறியாத காரணத்தினால் கண் சொருக வைக்கும்.

வள்ளி படத்தில் வரும் என்னுள்ளே பாடல் மேற்சொன்ன வகை.  இசையால் நம்மை அடிமை கொள்ள வைப்பது இசைஞானியின் தனிச் சொத்து.  அதனால் பெரிய ஆச்சரியம் இல்லை.  கவிஞர் வாலிக்கும் இப்படி கேட்டவுடன் மறக்க முடியாத பாடல்கள் தருவது முதன் முறை அல்ல.  ஆனால் இந்த பாடல் இன்னொரு இறவா வரம் பெற்றவரின் திறமைக்குச் சான்று.  அது பின்னணிப் பாடகி சுவர்ணலதா.  சாதாரணமாகப் பேசும் போது இயல்பாக இருக்கும் இவரது குரல் பாடும் போது மட்டும் எப்படி ஐஸ்கிரீம் தடவியது போல் ஆகிறது என்பது யாரும் அறியா ரகசியம்.

இந்தப் பாடலைப் பொறுத்தவரை அனைவரும் பாடி விட முடியாது.   தாபம், தாகம், ஏக்கம், மோகம் என அனைத்தும் குரல் வழி இசையோடு வரிகளோடு இணைந்ததால் மட்டுமே இதன் வெற்றி சாத்தியப் பட்டது.

கடவுள் என்னும் கொடூரன் இந்தக் குயிலை தான் மட்டுமே பாடச் சொல்லி கேட்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே  இப்பொழுதே அழைத்துக் கொண்டானோ?

இப்போது பாடலைப் பாருங்கள்.