Tuesday, April 17, 2007

பாட்டு எப்படி? - உன்னாலே உன்னாலே

ஜீவாவும் ஹாரிஸ் ஜெயராஜூம் 12பி, உள்ளம் கேட்குமே படங்களுக்குப் பிறகு இப்போது மீண்டும் இணைந்திருக்கிறார்கள். அருமையான கூட்டணி. ஜீவாவை ஒரு பெரிய இயக்குநர் வரிசையில் இன்னும் சேர்க்கும்படியான படங்கள் வரவில்லை. ஆனால் ஹாரிஸ் பல கட்டங்களை ஏற்கனவே தாண்டி விட்டார். ஜீவாவுக்கு ஒளிப்பதிவும் பாடல்களைப் படமாக்கும் வித்தையும் கைவந்த கலை! ஹாரிஸ் அதற்குக் கச்சிதமாகக் கைகோர்த்திருக்கிறார். இந்த வருடச் சிறந்த பாடல்களில் இவற்றில் சில இடம்பிடிக்கும் என்பதில் ஐயமில்லை. பாடல்களைக் கவிஞர் வாலியும் பா. விஜய்யும் எழுதி இருக்கிறார்கள். எந்தப் பாட்டை யார் எழுதியது என்று தெரியாமையால் சொல்லவில்லை. ரொம்ப எளிமையாகத் தாளம் போட வைக்கும் பாடல்கள் நிலைக்கும் என்று தெரிந்துதான் செயல்பட்டிருக்கிறார் ஹாரிஸ்.

1. ஹலோ மிஸ் இம்சையே

பாடியவர்: ஜி. வி. பிரகாஷ், அனுஷ்கா
ஹாரிஸின் இசையில் ஏற்கனவே பாடி இருந்தாலும் இசை அமைப்பாளர் ஆன பிறகு பிரகாஷ் பாடி இருக்கும் பாடல். ஹாரிஸ் டிரேட் மார்க் பாட்டு. அனுஷ்காவின் குரலை யுவன் உபயோகித்ததைப் பார்த்துப் பாடம் கற்றிருக்கிறார் ஹாரிஸ். ஆனால் பாட்டு ஏற்கனவே பல தடவை கேட்ட மாதிரியே இருப்பதுதான் பிரச்சினை. “அம்மான் மகளே” சில முறை கேட்டாலே பிடித்துப் போவாள்

மதிப்பு: 5


2. இளமை உல்லாசம்

பாடியவர்: கிரிஷ், ஷாலினி
சின்னப் பாட்டு. வாத்தியக் கருவிகளின் சத்தங்களைக் குறைத்து வார்த்தைகளுக்கும் குரல்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். கேட்கும்படியான இசையில் கேட்கும்படியான வரிகள். மூர்த்தி சிறிதென்றாலும் கீர்த்தி பெரிது.

மதிப்பு: 6


3. ஜூன் போனா

பாடியவர்: கிரிஷ், அருண்
புதிய பாடகர்கள். இளமையான வரிகள். முன்பு சொன்னது போல் மெல்லிய பீட்டு. மெட்டுக்கே முக்கியத்துவம்! “நட்பாச்சு லவ்வில்லையே… லவ்வாச்சு நட்பில்லையே” என்பதோடு “இந்த உலகத்தில் எவனுமே ராமனில்லை” கவிஞர் – உண்மைதான்! சில முறை கேட்டவுடனேயே முணுமுணுக்க வைக்கும் வரிகளும் தாளம் போட வைக்கும் பின்னணி இசையும் பாடலுக்குப் பலம்.

மதிப்பு: 6


4. முதல் நாள் இன்று

பாடியவர்: கே கே, மகாலட்சுமி, ஷாலினி
கே கேயும் மகாலட்சுமியும் இதற்கு முன் ஹாரிஸ் 12பி படத்திலும் ஒரு ஜில்லுப் பாட்டு பாடி இருக்கிறார்கள். இந்தப் பாட்டும் மேற்சொன்ன சூத்திரத்தில்தான் அடங்குகிறது. தாளம் போட வைக்கும் டிரம்ஸ் ஒலி, லேசாகவே குரல்களோடு வரும் கிடார் இசை! நல்ல பாட்டு!

மதிப்பு: 6


5. முதல் முதலாக (உன்னாலே உன்னாலே)

பாடியவர்: கார்த்திக், கிரிஷ், ஹரிணி
ஹ்ம்ம்… ஹாரிஸ் ராஜ்ஜியம் இங்கே உச்சம். அவரது மிகப் பலம் பொருந்திய மெட்டு. கிரிஷின் குரல் மட்டும் கார்த்திக்கின் கம்பீரத்துக்கு (ப ப ப ப… ன்னு கலக்குறார் பாருங்க…) முன் லேசாகப் பெண்குரல் போல் ஒலிக்கிறது – நெருடல்! ஆனால் ஹரிணியின் குரலைச் சிறப்பாகப் பயன்படுத்திய இசையமைப்பாளர்களில் ஹாரிஸுக்கு முதலிடம்! வரிகளும் சுகமோ சுகம்! கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க!

மதிப்பு: 7


6. வைகாசி நிலவே

பாடியவர்: ஹரிசரண், மதுஸ்ரீ
ஒரு முறை கேட்டால் போதும்… உங்கள் மனதில் நச்சக்கென்று சம்மணம் கட்டி உட்கார்ந்து கொள்ளும் திறன் இந்தப் பாட்டுக்கு உண்டு. பாட்டு தொடங்கியதில் இருந்து முடியும் வரை அந்தக் கிறக்கம் தொடர்கிறது என்றால் அது “உண்மை வெறும் புகழ்ச்சி அல்ல”. “மைபூசி வைத்திருக்கும் கண்ணில் நீ பொய் பூசி வைத்திருப்பதென்ன” – என்ன கற்பனை!!! “மோகத்தீயும் தேகத்தீயும் தீர்த்தம் வார்த்துத் தீராது” – அட அட!!! ஹரிசரணின் முன்னேற்றம் வியக்க வைக்கையில் இன்னும் மதுஸ்ரீ உச்சரிப்பில் மேம்படுவது அவசியம்!

மதிப்பு: 7


மொத்தம்: 62%

மதிப்பும் விளக்கமும்:

7 - 10: “இது பாட்டு”

6: “சூப்பர்”

5: “அட ... நல்லாருக்கே!”

4: “பலமுறை கேட்டாப் பிடிக்கலாம்”

0-3: “சுத்த திராபை”

1 comment:

சிவமுருகன் said...

பிர்தீப் உங்களது கணிப்புகள் ரொம்ப அருமை.

அழகுக்கு அழகு சேர்க்க உங்களை அழைத்துள்ளேன்.