Monday, April 16, 2007

பாட்டு எப்படி? - மாயக்கண்ணாடி

சேரனின் “தேசிய கீதம்” (இந்தப் பட்த்திற்கு வந்த எதிர்ப்பு நினைவிருக்கிறதா) பட்த்துக்குப் பிறகு மாயக்கண்ணாடியில் இளையராஜா இணைந்திருக்கிறார்! நல்ல இயக்குநர், நல்ல இசையமைப்பாளர் இருவரும் இணைகையில் நல்ல பாடல்களன்றி வேறென்ன வர இயலும்? ஆனால் இருவருக்குள்ளும் ஓடும் ஒத்த நினைவுகள் மட்டுமே காலத்தால் அழியாத கானங்களைத் தர முடியும். இந்தப் பட்த்தில் பாடல்கள் மோசம் என்று சொல்ல முடியவில்லைதான். ஆனால் 80-90களில் இசைஞானியின் பாடல்களில் இருந்த ஈர்ப்பைத் தேடினால் ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. எப்படியும் பின்னணி இசையில் பிரித்து மேய்ந்திருப்பார் என்று நானே சமாதானம் செய்து கொள்கிறேன்.

1. காதல் இன்று இப்போது
பாடியவர்:இளையராஜா
இன்றைய காதலின் நிதர்சனத்தைச் சொல்லும் பாடல் இது. 80களில் வந்த எளிய இசை பாடலின் தரத்தைக் கூட்டுகிறது என்றால் இன்றைய காதலர்களின் ஏகோபித்த எதிர்ப்பைப் பெறும் வகையில் இருக்கின்றன பாடல் வரிகள். இன்று உண்மைக் காதல் இல்லவே இல்லை என்று சாதிக்கிறார் கவிஞர்.

மதிப்பு: 5


2. காசு கையில் இல்லாட்டா
பாடியவர்:இளையராஜா
முதல் பாடல் காதல் நிலவரத்தைப் பேச இது காசு நிலவரத்தைப் பேசுகிறது. பாடும் குரலும் உச்சரிப்பும் மட்டுமே முக்கியத்துவம் பெறும் மெட்டு இது. எளிய தபலாவும் இடையில் அங்கங்கு புல்லாங்குழலும் வர, வரிகளில் மின்னுகிறது பாட்டு. “பட்டுப் பட்டுப் படிச்சவந்தான் மற்றவர்க்குப் பாடமாகிறான்” – உண்மை இது.

மதிப்பு: 5


3. கொஞ்சம் கொஞ்சம்
பாடியவர்:கார்த்திக், ஷ்ரேயா கோஷல்
பாட்டு தொடங்கும் போது இளையராஜா “பேசிக் லவ் ஃபீல் இருந்த்தென்றால் போதும்?” என்று கேட்டுக் கொள்கிறார். சேரன் ஆமென்றதும் வரும் பாட்டில் அது இருக்கிறது. இதுவும் 90களின் மெட்டுதான். ஒரே ஒரு பீட்டு பின்னால் வர மெட்டு மட்டுமே முக்கியத்துவம் பெறும் பாட்டு கார்த்திக்கின் கம்பீரமான குரலினாலும் ஷ்ரேயாவின் இனிய உச்சரிப்பினாலும் பலம் பெறுகிறது.

மதிப்பு: 6


4. ஒரு மாயாலோகம்
பாடியவர்:திப்பு, மஞ்சரி
இதுவும் நிறைய வாத்தியக் கருவிகள் வைத்து மெட்டைச் சுகமாக்க வைக்கப் பட்ட முயற்சி. ஆனால் அவ்வளவு சுகமாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். மீண்டும் மீண்டும் கேட்டால் பிடிக்கலாம்.

மதிப்பு: 4


5. ஓ! ஏலே எங்கே வந்தே
பாடியவர்: இளையராஜா
இந்தப் பாட்டு பட்த்துக்கு எவ்வளவு முக்கியம் என்று பட்த்தைப் பார்த்த பிறகுதான் சொல்ல முடியும். இவ்வளவு ஹை பிட்ச் பாடல்களை ஏற்கனவே இளையராஜா பாடி இருந்தாலும் இனிமேல் மற்றவர்களிடம் கொடுத்து விடுதல் நலம். ஆனா நடுவில் வரும் வசன உச்சரிப்பு.. ஹா! இது அவருக்கே உரியது!!!

மதிப்பு: 4


5. உலகிலே அழகி
பாடியவர்: விஜய் ஜேசுதாஸ், நந்திதா
இந்தப் பாட்டு இளையராஜா ஸ்பெஷல். அங்கங்கு “அது ஒரு கனாக்காலம்” என்று நினைக்கத் தோன்றும் பாட்டு இது. இளையராஜாவின் மெலடி மெட்டு என்றாலே ஒரு தனித்தன்மை இருப்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம். சரணத்தில் குரல்களோடு வயலின்கள் தொடர்ந்து வருவதைக் கொஞ்சம் கேளுங்கள். சின்ன விஷயம் கூட எப்படிப் பாட்டு அமைப்பை மாற்றும் என்று தெரிய வரும்.

மதிப்பு: 6

மொத்தம்: 50%

மதிப்பும் விளக்கமும்:
7 - 10: “இது பாட்டு”
6: “சூப்பர்”
5: “அட ... நல்லாருக்கே!”
4: “பலமுறை கேட்டாப் பிடிக்கலாம்”
0-3: “சுத்த திராபை”

2 comments:

- யெஸ்.பாலபாரதி said...

//“சுத்த திராபை”//

திராபை அல்ல... திராவை. ;-)

பிரதீப் said...

///திராபை அல்ல... திராவை. ;-)
////
வருகைக்கு நன்றி பாலபாரதி...
திராபைன்னா பயனற்றது, மதிப்பற்றது, கழிசடைன்னு அர்த்தம் (பால்ஸ் அகராதி...)

திராவைன்னா என்ன???