Wednesday, September 20, 2006

வேட்டைக்கு நடுவில் விளையாட்டு!

ஏற்கனவே நிறைய பேரு படத்தின் நிறைகளைத் அலசித் துவைத்துப் பிழிந்துக் காயப் போட்டு விட்டார்கள். ஆனாலும் நம்ம கருத்துகளைச் சொல்லலைன்னாதான் நமக்குத் தலை வெடிச்சிருமே... படம் வந்து கொஞ்ச நாள் ஆனாலும் பாக்க நமக்குக் குடுத்து வைக்கலையே... இப்பத்தான் நண்பர் ராகவன் புண்ணியத்தில பெங்களூர்ல பாத்தேன்.

எனக்கும் படம் புடிச்சிருந்தது... மிகச்சில விஷயங்களைத் தவிர! அதையும் சொல்லீறணும்ல?

1. unmotivated serial killers என்ன விதத்தில் கதையில் பொருந்துகிறார்கள் என்றே புரியவில்லை. எந்த தொடர் கொலையாளிக்கும் ஒரு அழுத்தமான பின்னணி இருக்கும். யாரும் தொடர் கொலையாளியாகப் பிறப்பதில்லை (மேல் விவரங்களுக்கு மதன் எழுதிய "மனிதனுக்குள் மிருகம்" படிக்கவும்). "சிகப்பு ரோஜாக்கள்" கூட அனேகமாக இது போன்ற கதைதான். ஆனால் அதில் உள்ள பின்னணியைக் கொஞ்சம் ஒப்பிட்டுப் பாருங்கள், வித்தியாசம் புரியும். போகிற போக்கில் கொலைகளும் ஒரு (சரியாகப் பார்த்தால் இரண்டு) தேசத்தின் ஒட்டு மொத்த காவல்துறையும் கையாலாகாமல் நிற்பதும், என்னய்யா இது? சரி சினிமாதானே, மன்னிச்சிருவோம்!

2. அடுத்தது அந்த பைசெக்ஸூவல் பிரச்சினை. கமல் ஒரு காட்சியில் காதலி என்று நக்கலாகச் சொல்வதையும் ஹோமோசெக்ஸூவல்ஸ் (இதுவும் டெக்னிக்கலாகப் பார்த்தால் தவறு) என்று கூறுவதையும் டென்மார்க் நார்வே அமெரிக்கா போல வேறொரு நாட்டில் எடுத்திருந்தால் படத்தைத் தடை செய்திருப்பார்கள்.

3. ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் அனைத்துமே ஒவ்வொரு வகையில் சுகம்! குறிப்பாக "வெண்ணிலவே" பாட்டை தினமும் ஒரு தடவையாவது கேட்க வேண்டும் என்று எனக்கு வேண்டுதல். பின்னணி இசையில் நிறைய புத்திசாலித்தனம் கூடி இருக்கிறது. ஒரு காட்சியில் பின்னணியில் ஒருவர் செல்போன் பேசுவதைக் கூடச் சரியாகக் கணித்திருக்கிறார். பல காட்சிகளில் richness தேவை என்பதைப் புரிந்து கொண்டிருக்கிறார். ரகுமானையும் சில காட்சிகளில் (குறிப்பாக அந்த கோட்டைக் காட்சி) உதவிக்கு அழைத்திருக்கிறார். ஆனால் பாருங்கள், கமல் - ஜோதிகா பரஸ்பரம் காதலைச் சொல்லிக் கொள்ளும் மென்மையான காட்சியில் கூட 100 வயலின்கள் எழுப்புவது இசை அல்ல, இரைச்சல் என்று புரிந்து கொள்ள ஹாரிஸ் வெகுதூரம் பயணம் செய்ய வேண்டும்.

4. பாடல்களைப் பொறுத்தவரை தாமரைக்கு ஜே! பதாகை என்ற வார்த்தையை அறிமுகப் படுத்தியதில் இருந்து நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே என்று பொங்கும் வரை தாமரையின் பங்களிப்பு சூப்பர், மன்னிக்க, அருமை!

5. இவை இருக்க, பாடல்கள் படத்தின் வேகத்துக்குப் பெரும் தடைக்கல். சில பாடல்கள் ஏன் வருகின்றன என்றே புரியவில்லை. கோவாவில் சிற்றுடை அணிந்த சிற்றிடைப் பெண்கள் ஆட வேண்டும் என்பதற்காகவே "நெருப்பே" பாடல், அங்கு கொலையாளிகள், என்பது அபத்தம். "பார்த்த முதல் நாளே" பாடலும் எதற்கு என்றே புரியவில்லை. அட, நீங்க வேற, அந்த ஃபிளாஷ்பேக்கே எதற்கு என்று புரியவில்லை என்கிறீர்களா? அதுவும் சரிதான்! இதே போல் இதே கமல் மனைவி இழந்த சோகத்தை மகாநதியிலும் காட்டி இருப்பார்கள். ஒரு போட்டோ கூட கிடையாது. வெறும் காட்சி அமைப்பு மட்டுமே!

6. ஹீரோவின் அனாவசிய ஹீரோயிசத்தைக் காட்டும் இயக்குநர் இன்னும் கொஞ்சம் யோசித்திருந்தால் படத்தில் கடைசிக் காட்சி வரையில் ஹீரோவால் வில்லன்களை ஒரு மண்ணும் செய்ய முடியவில்லை என்பது உறுத்தி இருக்கும். கடைசிக் காட்சியில் வில்லனைக் கொல்லும் சினிமா போலீஸ் என்பது சரியாகத்தான் இருக்கு! சரி, யதார்த்தத்தைக் காட்டுகிறேன் என்றால், என்ன எழவுக்குக் கண்ணை நோண்டச் சொல்லி ஒரு டப்பா வில்லனின் பக்கத்தில் போய் நிற்க வேண்டும்?

மொத்தத்தில் சினிமாத்தனத்துக்கும் யதார்த்தத்துக்கும் நடுவில் பயணம் செய்ய ஆசைப்பட்டு இருக்கிறார் கௌதம். ஆனால் ஆசை மட்டுமே பட்டிருக்கிறார். தொழில்நுட்ப ரீதியாகப் பார்த்தால் உலகத் தரத்துக்கு எந்த விதத்திலும் குறைந்ததில்லை இந்தப் படம்! பாராட்டுகிறேன், மனமார! ஆனால்... கதைன்னு பாத்தா என்ன செய்யிறது? எல்லாம் விதி!

ஆனா, மறக்காம ஒரு தடவையாச்சும் பாத்துருங்க!

6 comments:

G.Ragavan said...

வாங்கய்யா வாங்க

ரொம்ப நாள் கழிச்சி வந்திருக்கீங்க...

வேட்டையாடி நடுநடுவுல விளையாடிக்கிட்டும் வந்திருக்கீங்க...

நீங்க சொல்ற எந்தக் கருத்துக்கும் எதிர் கருத்துச் சொல்ல முடியலையே....

அப்புறம் எப்படிச் சண்ட போடுறது? :-)

பிரதீப் said...

//அப்புறம் எப்படிச் சண்ட போடுறது? :-)
//
ராகவா,
சண்டை போடுறதுக்கு நமக்கெல்லாம் காரணமா வேணும்??? என்னங்க ஜோக் அடிக்கிறீங்க???

பிரதீப் said...

//தியேட்டர்ல போய் பார்க்கிற அளவுக்கு படத்துல ஒன்னும் இல்லையே, //

அதுக்காக திருட்டு டிவிடி வாங்கிப் பாருங்கன்னு வெளிப்படையாவா சொல்ல முடியும்??? :)

தொழில்நுட்ப ரீதியில் பார்த்தால் படம் ஒன்றும் சோடை போகவில்லைன்னு சொன்னேன்...

வருகைக்கு நன்றி

Unknown said...

சரியான அலசல் :)

மஞ்சூர் ராசா said...

தொழில்நுட்ப ரீதியிலும் சில இடங்களில் சறுக்கியிருக்கிறார்கள். அதை இன்னும் கொஞ்சம் நுணுக்கமாக கவனித்திருந்தால் தெரிந்திருக்கும்.

இருந்தாலும் ராகவனும் நீங்களும் அருமையான விமர்சனங்களால் கலக்கியிருக்கிறீகள் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

ராகவா..... கேட்கிறதா?

பிரதீப் said...

//தொழில்நுட்ப ரீதியிலும் சில இடங்களில் சறுக்கியிருக்கிறார்கள். அதை இன்னும் கொஞ்சம் நுணுக்கமாக கவனித்திருந்தால் தெரிந்திருக்கும்.//
இருக்கலாங்க... அடுத்த தடவை, இல்லை இல்லை அடுத்த படத்தை நல்லாக் கவனிச்சு எழுதீருவம்!!!

//இருந்தாலும் ராகவனும் நீங்களும் அருமையான விமர்சனங்களால் கலக்கியிருக்கிறீகள் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

ராகவா..... கேட்கிறதா? //
மிக்க நன்றி. ராகவனுக்கும் கேட்டுருச்சாம்!!!