Tuesday, July 18, 2006

கலைஞர்-ஜெ-வாஸ்து-காமெடி!!!

இன்றைய காமெடி!!!

நான் வேறு எதுவும் சொல்லத் தேவையில்லை! இந்த அறிக்கையே சொல்லும்!!! முழுசாப் படிச்சு எஞ்சாய் பண்ணுங்க!

அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-


தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நடவடிக்கைகள் தலைமைச் செயலக வளாகத்தினுள் பாரம்பரியம் உள்ள இடத்தில் அமைந்திருப்பது அனைவரும் அறிந்ததே. மேற்படி சட்டமன்றப் பேரவை வளாகமும், அதன் அமைப்பும், ஒரு வரலாற்றுப் பின்னணி கொண்டதாகும். இந்திய விடுதலைக்குப் பிறகு 1952-ம் வருடத்தில் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அந்த காலத்திலிருந்து நான் முதல்-அமைச்சராக இருந்த வரை தமிழக சட்டமன்றப் பேரவை மேற்படி இடத்தில் தான் நடைபெற்று வந்தது. இடைப்பட்ட காலத்தில் ஊட்டியில் நடைபெற்ற ஒரு தொடர் மற்றும் மராமத்துப் பணிகள் மேற்கொண்ட போது, இப்போது கலைவாணர் அரங்கம் என்று சொல்லப்படும் இடத்தில் ஒரு சில தொடர்கள் நடைபெற்றதைத் தவிர, மற்ற அனைத்து சந்தர்ப்பங்களிலும் தமிழக சட்டமன்றப் பேரவையின் கூட்டம் மேற்படி வளாகத்தில் தான் நடைபெற்று வந்தது.

தமிழ்நாட்டு மக்களுக்கு வேண்டிய நல்ல திட்டங்கள் அனைத்தும் அங்கிருந்து தான் வெளிப்படுத்தப்பட்டது. எத்தனையோ தலைவர்கள், உதாரணமாக காமராஜ், அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோர் அந்த சட்டமன்ற பேரவையில் தான் உரையாற்றி இருக்கிறார்கள். முதல்-அமைச்சர் ஆற்றும் சட்டமன்ற பணிகளை செய்துள்ளார்கள்.

மேற்படி சட்டமன்றப் பேரவையின் இருக்கைகள் மிகவும் தரம் வாய்ந்த மரச் சாமான்களைக் கொண்டு தயார் செய்யப்பட்டு கடந்த 55 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்களையும், முதல்-அமைச்சர்களையும் தன்னகத்தே கொண்டு இயங்கி வந்து இருக்கின்றது.
இவ்வளவு பெருமை வாய்ந்த தமிழக சட்டமன்றப் பேரவைக்கும் மற்றும் அதன் வளாகத்திற்கும் கருணாநிதியால் மிகப் பெரிய ஊறு இப்போது நேர்ந்துள்ளது. இதுகாறும் பின்பற்றப்பட்டு வரும் சட்டமன்ற நடைமுறையானது, முதல்-அமைச்சருக்கு எதிர்வரிசையில் அவருக்கு நேர் எதிரில் தான் எதிர்க்கட்சித் தலைவர் அமர்ந்து இருப்பார்.


முதல்-அமைச்சரை ஒட்டி அவரது வலது பக்கத்தில் மற்ற அமைச்சர்களும், அதே போல எதிர்க்கட்சித் தலைவரை ஒட்டி அவரது இடது பக்கத்தில் மற்ற கட்சித் தலைவர்களும் அமர்ந்து இருப்பார்கள். எந்த ஒரு சூடான விவாதமும், உணர்ச்சிப்பூர்வமான விவாதமும், அனைத்து தரப்பினரும் வெளிப்படுத்தும் உணர்ச்சிகளையும் எடுத்துச் சொல்லும் பாங்கினை பார்க்கும் விதத்தில் தான் முதல்-அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் அமரும் இருக்கைகள் இதுகாறும் இருந்து வந்தன.

தற்போது அவரது உத்தரவிற்கு இணங்க தமிழக சட்டமன்றப் பேரவையில் முதல்-அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின் இருக்கைகள் மற்றும் மேஜைகள் ஆகியவை முற்றிலும் மாற்றப்பட்டுள்ளன.
காலம் காலமாக இதுவரை இருந்த தன்மையினை மாற்றி, தற்போது முதல்-அமைச்சர் உட்காரும் இடம் பேரவைத் தலைவரின் வலது புறத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது என்றும், முதல்-அமைச்சர் அமர்ந்திருப்பதை பார்க்க முடியாத வகையில் பேரவைத் தலைவரின் இருக்கையால் மறைக்கப்பட்டு அந்த இருக்கைக்கு இடது புறத்தில் எதிர்க்கட்சித் தலைவரின் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிய வந்துள்ளது.

அதாவது, முதல்-அமைச்சரை எதிர்க்கட்சியில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள உறுப்பினர்கள் பார்க்க இயலாது. அதே போல ஆளும் கட்சித் தரப்பில், எதிர்க்கட்சித் தலைவரையும் மற்றும் குறிப்பிட்ட பகுதியில் உள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் பார்க்க இயலாது.

கருணாநிதி இவ்வாறு இருக்கைகளை மாற்றியதற்கு என்ன விளக்கம் தர இருக்கிறார்? எனக்குக் கிடைத்த தகவல்படி வாஸ்து சாஸ்திரத்தின் முழுப்பிடியில் கருணாநிதி தற்போது சிக்கியுள்ளார்.

முதல்-அமைச்சர் அறையிலும் கருணாநிதி அமர்ந்து அதிகம் பணியாற்றுவது இல்லை. அதற்குக் காரணம் அந்த அறை அமைந்துள்ள இடம் அவருடைய ராசிப்படி சரியாக இல்லை என்றும், இதுகாறும் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்ற அறை தற்போது முதல்-அமைச்சர் பணியாற்றும் இடமாக்கப்பட்டுள்ளது என்றும், இதற்கெல்லாம் காரணம் வாஸ்து தான் என்றும் தெரிய வருகின்றது. அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் இடமும் அடியோடு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதற்கும் வாஸ்து தான் காரணம் என்றும் தெரியவருகிறது.

சட்டமன்றப் பேரவை என்பது யாருடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல. எந்த ஒரு கட்சிக்கும் சொந்தமும் அல்ல. அப்படி இருக்கும் போது யாரைக் கேட்டுக் கொண்டு இவ்வகை மாற்றங்கள் நடைபெற்றுக் கொண்டு வருகின்றன என்பதை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய கடமை முதல்-அமைச்சருக்கும், சட்டமன்றப் பேரவைத் தலைவருக்கும் உள்ளது.
எந்த ஓர் எதிர்க்கட்சித் தலைவரையும் இதுகாறும் இது குறித்து கலந்து ஆலோசனை செய்ததாக தெரியவில்லை. ஏதோ தன் வீட்டு வாசல்படி, கதவு, ஜன்னல்களை மாற்றி அமைப்பது போல் முதல்-அமைச்சரும், சட்டமன்றப் பேரவைத் தலைவரும் நடந்து கொள்வது மிகவும் வேதனையாக இருக்கிறது. இதற்காக செலவழிக்கப்படும் பெரும் பணம் வீண் தானே?

இதுவரை என்ன நடைமுறை பழக்கவழக்கமோ அதனை திரும்பக் கொண்டுவருவது தான் ஒரு சரியான தீர்வாக அமையும்.
தினசரி கொலை, கொள்ளை என்று சட்டம்-ஒழுங்கு காற்றில் பறந்து கொண்டிருக்கிறது. ஆளுங்கட்சியினரின் அராஜகம் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது. எங்கே பார்த்தாலும் மணல் கொள்ளை; கள்ளச் சாராயம் தமிழகமெங்கும் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது.
இதே வேகத்தில் சட்டமன்றப் பேரவையின் பாரம்பரியமும் குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளது. அதனுடைய வெளிப்பாடு தான் சட்டமன்றப் பேரவையில் முதல்-அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் இருக்கைகள் இடமாற்றம். நாட்டு மக்கள் இதனை தெரிந்து கொள்ள வேண்டும் சம்பந்தப்பட்டோர் இதனைத் திருத்திக் கொள்ள வேண்டும். இருக்கைகள் இடமாற்றம் மட்டுமே வாழ்க்கையை மாற்றி அமைத்து விடாது.

இதனால் மைனாரிட்டி அரசு நிலைத்து நின்று விடாது. மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும் திட்டமும், செயலாக்கமும் தான் ஓர் அரசுக்கு முக்கியம் என்பதை இனியாவது கருணாநிதி புரிந்து கொள்ள வேண்டும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.

8 comments:

Darren said...

யோவ் முந்திக்கிட்டீங்களே அப்பு...

நான் நல்லா நக்கலா ஒரு பதிவு போடலாம்னு இருந்தேன்..
அறிக்கையை type பண்ண சோம்பல் பட்டு தமிழ்முரசுக்காக wait பண்ணிக்கிட்டு இருந்தேன்..

Anyway கலக்கல் காமெடிதான் போங்க...

இன்னைக்கு அறிக்கை விட நல்ல நாளன்னு கேரள பணிக்கரை Mummy கேட்டாங்களான்னு தெரியல...

கண்ணாடியை உடைச்சது போதாது..முகத்த பேக்கனும்னு நினைக்கிறாங்க போல..

மு.கார்த்திகேயன் said...

எப்ப எப்ப எப்பா.. எப்படித்தான் இந்த அரசியல்வாதிகள் காலத்தை ஓட்டுராங்களோ தெரில..

என் வலைப்பூவுக்கு வந்தமைக்கு நன்றி பிரதீப்

டிபிஆர்.ஜோசப் said...

இன்னைக்கு அறிக்கை விட நல்ல நாளன்னு கேரள பணிக்கரை Mummy கேட்டாங்களான்னு தெரியல...//

அதானே!

பிரதீப் said...

////
கண்ணாடியை உடைச்சது போதாது..முகத்த பேக்கனும்னு நினைக்கிறாங்க போல..
////
அது சரிதான், ஆனால் இனிமேல் சாத்தான் வேதம் ஓதுதுன்னு யாரும் பழமொழி சொல்ல வேணாம், ஜெ. வாஸ்து சாஸ்திரத்துக்கு எதிர்னு சொன்னாப் போதும்.

பிரதீப் said...

கார்த்திக், ஜோசப் சார்,
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

பிரதீப் said...

////
யப்பா! மஞ்சள் துண்டு மகிமை மாதிரி!
////
ஜெ. பச்சைப் புடவை பத்தி கலைஞர் காட்டமா அடுத்த கருத்து சொல்லிட்டா இந்தச் சக்கரம் ஒரு சுத்து வந்துரும்.
தமிழ் நாட்டுல இதையெல்லாம் சகஜம்னு நினைக்க ஆரம்பிச்சுட்டோமில்ல? வேறென்ன சொல்ல?

ரவி said...

அதிமுகவை எதிர்க்கும் தரனின் சிறுபிள்ளைத்தனமான காமெடியை ரசித்தேன்...

பிரதீப் said...

இதுக்கு அடுத்த பின்னூட்டம் தனிமனித தாக்குதலாக இருப்பதாலும் ஒரிஜினல் செந்தழல் ரவியான்னு சந்தேகமாக இருப்பதாலும் மட்டுறுத்தப் படுகிறது.